|
ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும் என்ற உண்மையை அறிந்த நாம் கழிந்த சென்ற ஆண்டில்
நம் வாழ்க்கைப் பக்கங்களை சற்றுப் புரட்டுவோம். விடுபட்ட இறைப்
பணிகளை முன்னெடுப்போம். வாழ்க்கையில் கறைப் படிந்திருந்தால் அதை
துடைத்து புதிய மனிதனாக - இலட்சிய முஸ்லிமாக - மாறுவோம்.
இஸ்லாமிய ஆண்டு
''ஹிஜ்ரி ஆண்டு''
என அடையாளப்படுத்தப்படுகிறது.
ஹிஜ்ரி காலண்டர் சந்திர மாதத்தை
அடிப்படையாக கொண்டது. அதுவே எல்லா இடத்திற்கும் அனைத்து
வகைப்பட்ட மனிதருக்கும் எளிமையானது. ஆய்வுக்கருவிகளின்
தேவையில்லாமலே நாட்களை அறிந்து கொள்ள உதவக்கூடியது. அதன்
காரணமாகவே சீனர்கள் இந்தியர்கள் அரேபியர்கள் என பெரும்பாலான பழைய
கலாச்சாரங்களச்சார்ந்த மக்கள் சந்திர ஓட்டத்தை அடிப்படையாக கொண்டு
தங்களது நாட்களை கணக்கிட்டு வந்துள்ளனர்.
கி பி
காலண்டருக்கு கிரிகோரியன் காலண்டர் என்று பெயர் அது சூரிய
ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இன்று நாம்
சிவகாசிக் காலண்டர்களின் புண்ணியத்தில் மிக எளிதாக நாட்களை
அடையாளம் கண்டு கொள்கிறோம். இல்லை எனில் சூரியன் நிற்கும் திசையை
வைத்து நாட்களை அறிந்து கொள்வது மிகவும் சிரமமானது.
கிராமத்து கிழவனோ கிழவியோ வானத்தில்
உலாவும் வட்ட நிலாவை அண்ணாந்து பார்த்து விட்டு இன்றைக்கு
வளர்பிறை பத்து என்று நொடியில் சொல்லிவிட
முடியும். சுட்டெறிக்கும் சூரியனை கைகுவித்து பத்து தடவைப்
பார்ததாலும் கருவிகளின் துணையின்றி அறிவியல் மாணவன் கூட தேதியை
சொல்ல முடியாது. எனவே பழமையான எளிமையான நாட்காட்டி நடைமுறையான
சந்திர மாதக்கணக்கே இஸ்லாமிய மாதக்கணக்காகவும்
அங்கீகரிக்கப்பட்டது.
ஹிஜ்ரி ஆண்டின் மாதங்கள் முஹர்ரமில்
தொடங்கி துல்ஹஜ்ஜில் முடிவடைகின்ற 12 மாதங்களாகும்.
வானங்களையும்
பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வுடைய ஏட்டில் உள்ளபடி
அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும் என்
திருக்குர்ஆனின் 9:36 வசனம் குறிப்பிடுகிறது.
அரபு மக்கள் அவர்களது நாட்டின்
தட்ப வெட்ப சூழ்நிலைக்கேற்பவும் கலாச்சார அடிப்படையிலும் 12
மாதங்களுக்கும் 12 பெயர்களை சூட்டியிருந்தனர். அப்பெயர்களில் பல
வேறு பகுதிகளிலிருந்து இறக்குமதியானவை.
ஆனால் வருடத்தை அடையாளப்படுத்துவதற்கு அவர்களிடம் எந்தவித
குறிப்பித்தக்க அடையாளமும் இருக்கவில்லை. அதனால் பின்னாட்களில்
வரலாற்றுத் தகவல்களை கனக்கிடுவதிலும் ஒப்பந்தங்களின் கால
நிர்ணயத்திலும் பிரச்சினை ஏற்பட்டது.
இஸ்லாம் பரந்துபட்ட பேரரசாக
வளர்ந்து எழுந்த போது வருடத்திற்கு ஒரு
அடையாளப்ப பெயர் மிக அத்தியாவசியமான தேவை என்பது உணரப்பட்டது.
நபி
(ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து உமர் (ரலி) அவர்கள்
காலத்தில் (கி.பி.639) ஆண்டுக்கு அடையாளமாக எந்தப் பெயரைச்
சூட்டலாம் ஆண்டின் தொடக்கமாக எதை கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.
இப்படி ஒரு ஆலோசனை
நடைபெறுவதறகான சூழலை ஏற்படுத்திய பெருமை நபித்தோழர் அபூமூஸா அல்
அஸ்அரீ (ரலி) அவர்களுடையதாகும். ஒரு
முறை உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதும் போது அரசின்
கடிதங்களில் தேதியிடப்படாமை குறித்து அவர் கேள்வி
எழுப்பியிருந்தார். அந்த கேள்வியின்
விளைவாக உடனடியாக இஸ்லாமிய காலண்டர் ஒன்றை உருவாக்க வேண்டியதன்
அவசியத்தை உமர் (ரலி) அவர்கள் உணர்ந்தார்கள்.
அதற்கு
முன்னர் ஒரு சமயம், உமர் (ரலி) அவர்களின் முன்னிலையில் ஒரு ஒப்பந்தம்
வாசிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் ஷஃபானில் முடிவடைவதாக
எழுதப்பட்டிருந்தது.உமர்(ரலி) அவர்கள், ஷஃபான் எனில் கடந்த
ஆண்டின் ஷஃபான் மாதமா? அல்லது இந்த
ஆண்டினுடையதா? ஏன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விடை அந்த
ஒப்பந்தத்தில் இருக்கவில்லை.
முன்னர் ஒருமுறை எமன்
நாட்டிலிருந்து வருகை தந்த ஒருவர், எமன் நாட்டில் தேதியிடும்
பழக்கம் இருப்பதாகவும் இன்ன நாள் இன்ன மாதம் இன்ன ஆண்டு என்று
அவர்கள் தேதியை குறிப்பிடுவதாகவும் எடுத்துச் சொலலியிருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில்
நபித்தோழர்களுடன் இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம் பற்றி
ஆலோசிப்பதற்கான ஒரு கூட்டத்தை ஹிஜ்ரி 17 ம் ஆண்டில் உமர் (ரலி)அவர்கள்
கூட்டினார்கள். அதில் நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
1)
நபியவர்களின் பிறப்பு 2)
நபியவர்களின் இறப்பு
3) நபி(ஸல்) அவர்கள் நபியாக
தேர்வு செய்யப்பட்டது 4)
நபியவர்கள் அவர்கள்
மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ததது.
இவற்றில் ஏதேனும் ஒன்றை
அடையாளமாக கொள்ளலாம் என்று தோழர்கள் ஆலோசனை
சொன்னார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் ஹிஜ்ரத்தை தேர்வு
செய்தார்கள்.
மற்ற மூன்று விசயங்களும் கூட
உலக வரலாற்றிலும் முஸ்லிம் சமூகத்திலும் முக்கியமானவை தான்
என்றாலும் அவை அனைத்தையும் விட இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரத்
மிக முக்கியமானது. ஆண்டுக்கு அடையாளமாய் சூட்டப்படவதற்கு மிகவும்
பொருத்தமானது. அதே நேரத்தில்
அழுத்தமான பொருளை தரக்கூடியது.
இஸ்லாமிய வரலாற்றில்
பல்வேறுபட்ட விசயங்களில் உமர் (ரலி) அவர்களின் தீட்சணயம்
வெளிப்பட்டுள்ளது என்ற போதும் ஹிஜ்ரத்தை தேர்வு செய்ததில் அது
இன்னும் சிறப்பாக வெளிப்படுகிறது.
நபியவர்களின்
பிறப்பையோ அல்லது நபியவர்கள்
நபித்துவம் பெற்தையோ ஆண்டின் அடையாளமாக குறிப்பிட்டிருந்தால் அது
மகிழ்ச்சிக்குரிய ஒரு விசயமாக அமைந்திருக்கும். அவ்வளவே!
நபியவர்களின் இறப்பை எடுத்துக்
கொண்டிருந்தால் அது கவலைக்கும் நினைவு கூறுதலுக்கும் உரிய ஒரு
நாளாக அமைந்திருக்கும். அவ்வளவே! ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்ட
போது அது மகிழ்ச்சி கவலை என்கிற உணர்ச்சியின் எல்லைகளைத் தாண்டி
அதை விடவும் மிக உயர்ந்த தத்துவத்தையும் லட்சியத்தையும்
நினைவுபடுத்;தும் விசயமாகிவிட்டது.
உலக மக்களின் நடைமுறைகளில் உலா
வருகிற ஆண்டுப் பெயர்களில் எதுவும் ஹிஜ்ரத்தை போல அமுத்தமான
தாக்கத்தை தரக்கூடியதில்லை.
அர்த்தச் செரிவுமிக்கதொரு
வளமான வரலாற்றுப் பின்னணியை கொண்ட ஆண்டுப்பெயர்கள் ஹிஜ்ரத்தைபோல
இன்னொன்று இல்லை.
எந்த ஒரு முன்னேறிய
சமூகமும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளத்தக்க தத்துவ
கணம் கொண்ட ஆண்டு அடையாளம் ஹிஜ்ரத்தைப் போல இன்னொன்று கிடையாது.
சீனர்கள் 12 விலங்குகளின்
பெயர்களை ஆண்டுப் பெயர்களாக வாய்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இவற்றைப் போல ஹிஜ்ரத் என்பது வேடிக்கை விநோதம் நிறைந்த
விளையாட்டுப் பெயர் அல்ல.ஹிஜ்ரத் அலாதியான அர்த்த புஷ்டி மிகுந்த
சொல்லாகும். ஹிஜ்ரத்தின் வரலாற்று பின்னணி கணமானது. ஹிஜ்ரத்
என்பது வெற்றுப் பெயரல்ல.
ஹிஜ்ரத் என்ற அரபி வார்ததைக்கு
குடிபெயர்தல் என்று பொருள். மார்க்கத்தை காப்பாற்றிக்
கொள்வதற்காக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு குடிபெயர்வதற்கு
இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்று
சொல்லப்படும்.
அல்லாஹ் மனித குலத்தை
வழிநடத்திச் செல்ல மனிதர்களிலே சிலரை தேர்வு செய்து நபி என்று
அறிவிக்கும் போது அவரை அவரது சமுதாயத்தவர்
எல்லோரும் ஏற்றுக் கொண்டனர் என்று வரலாறு இல்லை. நபியை ஏற்றுக்
கொளாத எதிரிகள் நபியின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பாகவும் நபியின்
உயிருக்கும் அச்சுறுத்தலாகவும் அமைந்து விடுகிறார்கள். எந்த ஒரு
நபி பிறக்கும் போதும் அவரது எதிரியும்
சேர்ந்தே பிறக்கிறான் என்று சொல்லப்படுவதண்டு. எதிரிகளின்
அக்கிரமங்கள் எல்லை கடநந்து போக ஆரம்பிக்கிற போது அல்லாஹ் இரண்டு
விதமான வழிமுறைகளை கையாண்டுள்ளான்.
1 எதிரிகளை அழித்து விடுவது.2
நபியை ஹிஜ்ரத் செய்யவைத்து நாடுகடத்தி விடுவது
ஹுது (அலை) சாலிஹ் (அலை) லூத்
(அலை) ஆகிய நபிமார்கள் காலத்தில் எதிர்ப்பு வலுத்த போது எதிரிகளை
அல்லாஹ் அழித்தொழித்தான். நபி இபுறாஹிம்
நபி மூஸா (அலை) ஆகியோரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அளவு
எதிர்ப்பு வலுத்த போது அவர்களை அல்லாஹ் அவர்களது சொந்த
ஊரிலிருந்து ஹிஜ்ரத் செய்யவைத்தான்.
உலகில் முதன் முதலில் ஹிஜ்ரத்
செய்தவர் என்கிற பெருமை இபுறாஹிம் (அலை)
அவர்களையே சாரும்.
நான்
என் இறைவனளவில் ஹிஜ்ரத் செய்யப் போகிறேன் என்று பிரகடணப்படுத்தி
(அல்குர்ஆன் 29:26) விட்டு அவர் தனது சொந் நாடான
இராக்கிலிருந்து சிரியாவிற்கு குடிபெயர்ந்தார்.
நபி மூஸா (அலை) அவர்கள்
எகிப்திலிருந்து ஒரு முறை சிரியாவிற்கும் மற்றொரு
முறை அகபா வளைகுடாப் பகுதிக்கும் குடிபெயர்நதார்கள்.
அந்த வரிசையில் இறுதித்தூதர்
முஹம்மது (ஸல்)அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்
சூழ்நிலை உருவான போது அவரை அல்லாஹ்
மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு
குடிபெயரச் செய்தான்.
பொதுவாக அகதியாக இன்னொரு ஊரில்
குடிபெயர்வது மிகவும் அவலமானது. சுயமரியதை அந்தஸ்த்து சுகமான
வாழ்கை அகியவற்றை பறித்துவிடக்கூடியது. சகலவிதமான கலாச்சார
தீமைகளுக்கும் இடமளிக்கக்கூடியது. உலக
வரலாறு நெடுகிலும் அகதிகளின் வாழ்கை முறையைப் பற்றிய தகவல்கள்
இப்படித்தான் படம் பிடிக்கின்றன. ஆனால்
எவர், அல்லாஹ்விற்காக மார்க்கத்தை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில்
தனது தாய் நாட்டையும் வீடுவாசல்களையும் சொந்த பந்தங்களையும்
சொத்து சுகங்களையும் துறந்து செல்கிறாரோ அவருக்கு விசாலமான
இடங்களையும் செழிப்பின் வாசல்களையும் அல்லாஹ் திறந்து வைக்கிறான்.
இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்.
திருக்குர் ஆன் கூறுகிறது:
எவர் இறைவனின் பாதையில் ஹிஜ்ரத்
குடிபெயர்ந்து செல்கிறாரோ அவர் ஏரளாமான வசிப்பிடங்களையும்
வளங்களையும் பெற்றுக் கொள்வார். (4:100)
திருக்குர் ஆனின் இந்த
வாக்குறுதி சத்தியமானது என்பதற்கு ஹிஜ்ரத் செய்த
நபிமார்களுடையவும் அவர்களை சார்ந்தவர்களுடையவும் வரலாறுகள்
சாட்சியாக இருக்கின்றன. நபி இபுறாஹிம்
(அலை) அவர்களுக்கும் நபி மூஸா அலை அவர்களுக்கும் நபி
(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் குடிபெயர்நத பூமிகளில் வரலாற்றின்
வழக்கத்திற்கு மாற்றமாக அல்லாஹ் அமைதியான அணுசரனையான செழிப்பான
வாழ்கையை வழங்கினான். நபி(ஸல்)அவர்களோடு பல நூற்றுக்கணக்கான
ஆண்களும் பெண்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள் அவர்கள்
அத்தனை பேருக்கும் மதீனாவில் செழிப்பான வாழ்கை காத்திருந்தது.
அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி)
அவர்கள் மக்காவிலிருந்து குடிபெயர்ந்து மதீனாவிற்கு வந்த போது நபி(ஸல்)
அவரை ரபீஃ என்ற மதீனா தோழரின் குடும்பத்தில் ஒருவராக
இணைத்துவிட்டார்கள். அகதி சகோதரரை தன் வீட்டிற்கு அழைத்துக்
சென்ற அந்த தோழர் அவரது கையைப்பிடித்துக் கொண்டு சொன்னார்.
சகோதரரே! ஏனக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன ஒன்றை நீங்கள்
எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு தோட்டங்கள் இருக்கின்ற
ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு மனைவியர்
இருக்கிறார்கள். அவர்களில் ஒரு வரை தேர்வு செய்யுங்கள் அவரை நான்
விவாக விலக்கு செய்து உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன் என்று
சொன்னார். நெகிழ்ந்து போன அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் (ரலி)
அவர்கள் அன்புச் சகோதரரே! அல்லாஹ் உங்களுக்கு குடும்பத்திலும்
செல்வத்திலும் அருட்செய்யட்டும். எனக்கு கடைவீதிக்கு வழி
காட்டுங்கள் இவை எதுவும் எனக்கு தேவை இல்லை என்று சொன்னார்கள்.
ஹிஜ்ரத் என்பது ஒரு வரலாறு
அல்ல. நூற்றுக்கணக்கான உணர்வெழுச்சிமிகுந்த வரலாறுகளின்
தொகுப்பு.அந்த வரலாறுகளின் வழியே பார்வையை செலுத்தினால்..
ஹிஜ்ரத் என்பது
லட்சித்திற்கான குறியீடாக இருக்கிறது.
ஹிஜ்ரத் எதிர்ப்பு வேதனை ஏளனம்
அனைத்தின் முடிவாக இருக்கிறது.
ஹிஜ்ரத் வெற்றியின் தலைவாசலாக
இருக்கிறது
ஹிஜ்ரத் திட்டமிடுதலை
கற்றுத்தரும் பள்ளிக்கூடமாக இருக்கிறது.
ஹிஜ்ரத் நம்பிக்கையின்
வெளிச்சக் கீற்றாக இருக்கிறது.
ஹிஜ்ரத் நட்பின் உரைகல்லாக
இருக்கிறது.
ஹிஜ்ரத் வளமான வாழ்கையின்
முன்னறிவிப்பாக இருக்கிறது.
ஹிஜ்ரத் இறைநம்பிக்கை -
தவக்குலின் சிகரமாக இருக்கிறது.
ஹிஜ்ரத் சொர்கத்தின்
வழித்தடமாக இருக்கிறது.
ஹிஜ்ரத் வீரத்தின்
வெளிப்பாடாக இருக்கிறது.
ஹிஜ்ரத் லட்சியத் துணைகளின்
எடுத்துக்காட்டாக இருக்கிறது.
ஹிஜ்ரத் மகோன்னதாமான
மனிதாபிமானிகளின் வரலாறாக இருக்கிறது.
சிந்திக்க சிந்திக்க பெருகி
வரும் வார்த்தைகள் அத்தனையும் சத்தியமானவை. இரத்தமும் சதையுமுமாக
உலாவிய உதாரணங்களை கொண்டவை. எல்லாவற்றிற்கும் மேலாக ஹிஜ்ரத்தை
தேர்வு செய்த உமர் (ரலி) அவர்கள் அதற்கான மிக அருமையான நியாயமான
காரணத்தை சொன்னார்கள்:
ஹிஜ்ரத்தையே நாம் தேர்வு
செய்வோம். ஏனெனில் அதுவே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும்
பிரிவிணைக் கோடாக இருக்கிறது.
ஹிஜ்ரத் என்கிற சிறப்பு
மக்காவாசிகளுக்கு மட்டுமே கிடைத்தது. அந்த ஹிஜ்ரத்திற்குள்ள தனி
மரியாததை மட்டும் இல்லை என்றால் நான் மதீனாகாரார்களில்
ஒருவராகிவிட்டிருப்பேன் என்று நபி(ஸல்)அவர்கள்
சொன்னார்கள். அந்த வார்த்தைகளில்
ஹிஜ்ரத்திற்குள்ள மரியாதையை
அளவிட்டுவிடலாம்.
ஹிஜ்ரத்திற்குப்பிறகு தான்
இஸ்லாம் வளர்ந்தது செழித்தது உலகம் முழுவதிலும்
வியாபித்தது. ஹிஜ்ரத் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான
பிரிவிணைக்கோடு என்று உமர் (ரலி) அவர்கள் விமர்ர்சித்ததுதான்
எத்துனை இழைபிசகாத உண்மை? என்னே தீட்சண்யம்?
இஸ்லாம் இன்று உலக மயமாகி
இருக்கிறதென்றால் அதற்கு வாசலை திறந்து
விட்ட பெறுமை ஹிஜ்ரத்தை சார்ந்தே! ஒவ்வொரு
ஹிஜ்ரி புத்தாண்டு பிற்கக்கிற போதும்
ஹிஜ்ரத்தோடு தொடர்புடைய உணர்வெழுச்சி மிக்க வரலாறுகள் அலை அலையாய்
பொங்கி எழுகிறது என்ற போதும் ஹிஜ்ரத் நவீன வாழ்கைக்கு
கற்றுத்தருகிற முக்கியமான செய்தி ஒன்று உண்டு.
மனித வாழ்வில் பிறப்போ இறப்போ
பிரதானமல்ல. அவ்விரண்டுக்கும் இடைபட்ட வாழ்க்கையில்
என்ன சாதித்தோம் என்பதும் அத்தகைய சாதனைப் பயணத்தில் எத்தகைய
சோதனைகளை நெஞ்சுறத்தோடு எதிர் கொண்டோம் என்பது தான் பிரதானமானது.
இந்த உண்மையை இஸ்லாமிய ஆண்டுக்கு ஹிஜ்ரி
என்று பெயரிட்டதன் மூலம் உமர் (ரலி)
அவர்கள் உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள்.
ஆண்டுக்கான அடையாளப் பெயர்
முடிவாகிய பிறகு மாதங்களைப்பற்றிய விவாதம் நடந்தது.
தற்போதைய நடைமுறையிலுள்ள அரபி
மாதங்களுக்கான பெயர்கள் ஏற்கெனவே வழக்கில் இருந்தன.
அவற்றை மாற்றவேண்டிய தேவை ஏற்படவில்லை
ஆகவே அவை அப்படியே ஒப்புக் கொள்ளப்பட்டன.
ஹிஜ்ரி
ஆண்டின் முதல் மாதமாக எதை வைக்கலாம் என்ற பேச்சு வந்தது. சிலர்
ரஜப் மாதத்திலிருந்து தொடங்கலாம் என்றனர். சிலர் ரமலானிலிருந்து
ஆரம்பிக்கலாம் என்றனர். உஸ்மான்(ரலி) அவர்கள் முஹர்ரமிலிருந்து
ஆரம்பிக்கலாம் ஏனெனில் அரபிகளின் பண்டைய வழக்கில் முஹர்ரம் முதல்
மாதமாக இருந்தது. அது புனித மாதமும்
கூட .ஹஜ்ஜை முடித்து விட்டுத் ஹாஜிகள் திரும்பும் மாதம் எனவே
முஹர்ரமை முதல் மாதமாக கருதலாம்
என்றார்கள்.
அவருடைய கருத்து ஏற்றுக்
கொள்ளப்பட்டது. நபி (ஸல்)அவர்கள்
ஹிஜ்ரத் செய்த கிபி 622 ம் ஆண்டு ஹிஜ்ரி
முதலாம் ஆண்டாக கருதப்பட்டது. நபி
அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதத்தில் என்றாலும்
அந்த ஆண்டு முஹர்ரம் மாதத்திலிருந்தே
ஹிஜ்ரி ஆண்டு தொடங்குவதாக
கணிக்கப்பட்டது. அந்த வகையில் கி.பி 622 ஜுலை 16 ம் தேதி ஹிஜ்ரி
முதலாம் ஆண்டின் முதல் நாளாக கருதப்படுகிறது.
அன்று
தொடங்கிய ஹிஜ்ரி ஆண்டின் வரலாறு இன்று
1429 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது.
ஹிஜாஸின் பாலைவனப்
பெருவெளியில் பதிந்த 4 பாத அடிகளில்
ஹிஜ்ரத்தின் பயணம் தொடங்கியது. அது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு
பயணமல்ல.புதிய வரலாற்றை நிகழ்த்திய பயணமாகிவிட்டது.
புதிய ஹிஜ்ரி
ஆண்டு ஹிஜ்ரத்தின் புனித உணர்வுகள் அத்தனையையும் மொத்தமாய்
பூமிக்குத் தந்து மானுடத்தின் வாசலில் மகிழ்ச்சித் தோரணம்
கட்டட்டும்.
நன்றி :
இதுதான் இஸ்லாம்.காம் |