Home

News

Members

Islam

Contact

Activities

Guest Book

Your Vote

 

 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அருள்மறை கூறும் அழகிய மொழிகள்:-

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி யிருக்கின்றானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள், ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு, (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு, எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:32)

 

வளைகுடா செய்திகள்  16-03-2008 17:01

உள்ளே
மரண அறிவிபுக்கள்
முத்துப்பேட்டை செய்திகள்
 துபாயில் வேலைவாய்ப்பு
சங்க செய்திகள்

வளைகுடா செய்திகள்

கல்வி

உங்கள் பக்கம்

வாழ்த்துக்கள்

 சிறப்பு செய்திகள்

கவிதைகள்

 

   

துபாயில் மத்திய கிழக்கின் மிகப்பெரிய புத்தக நிலையம்

 

துபாயில் சனிக்கிழமை ( 15 மார்ச் 2008 ) மாலை துபாய் திருவிழா நகரில் ( Dubai Festival City ) மக்ருதி புத்தக நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதுவே மத்திய கிழக்கின் மிகப்பெரிய புத்தக நிலையமாகக் கருதப்படுகிறது. திறப்பு விழாவினையொட்டி பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புத்தக நிலையம் திறக்கப்பட்டதையொட்டி புத்தக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் படையெடுத்துள்ளனர்.

http://www.magrudy.com/

 

10 ஆண்டுக்கு மேல் காரை ஓட்ட துபாயில் தடை!

துபாய், மார். 10 - 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு காரை பயன்படுத்தக் கூடாது என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையால் ஏற்படும் மாசு, அதனால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் ஆகியவை குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஒரு காரின் உழைக்கும் வயதை 10 ஆண்டாக நிர்ணயித்துள்ளது துபாய் நகராட்சி.

துபாயில் தற்போது வாகனங்களால் ஏற்படும் மாசின் அளவு 13 சதவீதமாக உள்ளது. பெட்ரோல் கார்களால் ஏற்படும் மாசு இது. மேலும் டீசல் கார்களால் ஏற்படும் புகை மாசின் அளவு 19 சதவீதமாகும். இந்த புகை மாசு காரணமாக துபாயில் வெப்ப நிலை அதிகரித்திருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து துபாய் சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான கார்களைத் தடை செய்ய நகராட்சிக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதை ஏற்ற நகராட்சி நிர்வாகம், ஒரு வாகனத்தை 10 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது.

 

அபுதாபியில் 210 வருடத்திற்கு முந்தைய ஹதீஸ் நூல்

 

அபுதாபியில் டாக்டர் அஹமது கூரி ( வயது 56 ) தனது வீட்டில் சுய ஆர்வத்துடன் அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் 210 வருடத்திற்கு முந்தைய ஹதீஸ் நூல் உள்ளிட்ட பல்வேறு அரிய பொருட்களை வைத்துள்ளார்.

இதனைக் காண விரும்புவோர் 055 444 34 14 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு வரலாம் எனத் தெரிவித்துள்ளார் அஹ்மது கூரி.                                                                                நன்றி: gulfnews 

பஹ்ரைனில் கட்டுமான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10 ஆயிரம்: இந்தியா வயுறுத்தல்

 

துபை, பிப். 7: பஹ்ரைனில் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் முறையாக பயிற்சி பெறாத அனைத்து இந்திய தொழிலாளர்களுக்கும் மாத ஊதியமாக குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்தியா வயுறுத்தியுள்ளது. இதன் மூலம் பணிக்காக பஹ்ரைன் வந்த தொழிலாளர்கள் நாடு திரும்புவது தவிர்க்கப்படும்.

மேலும் இந்த நடைமுறை மார்ச் 1-ம் தேதி முதல் தொழிலாளர்கள் ஒப்பந்தத்துடனேயே இணைக்க வேண்டும் என இந்திய தூதரகம் வயுறுத்தியுள்ளது. இது குறித்து இந்தியத் தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி கூறியதாவது: தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியம் கடைசியாக போடப்பட்ட ஒப்பந்தத்தோடு முடிவடைகிறது.

வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களின் வசிப்பிடம் மற்றும் உணவு தேவைகளுக்கு ஆகும் செலவுகளை கருத்தில் கொண்டே அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்பது கடந்த அக்டோபர் மாதத்திலேயே நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனல் நிறுவனங்கள் அதைப் பின்பற்றுவதில்லை எனவே அவை மீண்டும் வயுறுத்தப்படுகிறது.

முறையாக பயிற்சி பெறாத இந்திய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது என்றார் ஷெட்டி. இந்நிலையில் பஹ்ரைனில் உள்ள மனித உரிமைச் சமூகம் என்ற அமைப்பு பயிற்சி பெறாத தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என வயுறுத்தியுள்ளது.

 

 

 267 சட்டவிரோத இந்தியத் தொழிலாளர்கள் ஷார்ஜாவில் கைது

 

வெள்ளிக்கிழமை, ஜனவரி 25, 2008  
 

ஷார்ஜா: ஷார்ஜாவில் முறையான ஆவணங்கள் இன்றி வேலை பார்த்து வந்த 267 இந்தியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறையான குடியேற்ற மற்றும் ஒர்க் பெர்மிட் இல்லாமல் வேலை பார்த்து வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஷார்ஜா குடியேற்றத் துறை அதிகாரிகளும், போலீஸாரும் இணைந்து மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையில், முறையான ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டை இல்லாமல் பணியாற்றிய 67 இந்தியர்கள் உள்பட 267 பேர் சிக்கினர்.

இவர்கள் அனைவரும் விசிட் விசாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு தங்குமிட விசா உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அவை காலாவதியாகி விட்டன. அவற்றை அவர்கள் புதுப்பிக்காமல் இருந்துள்ளனர். சிலர் தங்களது ஸ்பான்சர்கள் தவிர மற்றவர்களுக்காகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். அனைவரும் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் முடிந்து விட்டதால், கைது செய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அவர்களுக்கு பெருமளவில் அபராதம் விதிக்கப்படக் கூடும். தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேலை கொடுத்தவர்களுக்கும் பெரும் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷார்ஜாவில் உள்ள பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் 267 பேரும் கைது செய்யப்பட்டனர்.

 

 

 துபாய் விற்பனைத் திருவிழா Dubai Shopping Festival (DSF)

 

உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் மிகப் பிரமாண்டமான துபாய் விற்பனைத் திருவிழா  ஜனவரி 24ந் தேதி முதல் பிப்ரவரி 24ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேற்கண்ட தகவலை ஷேக் அஹமது பின் சயீது அறிவித்தார்.

 

துபாய் விற்பனைத் திருவிழா 13 ஆவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழா 32 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது பொழுது போக்கு அம்சங்களுடன் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தாய் அமைந்து வருவதில் துபாய் விற்பனைத் திருவிழா ஒரு தனியிடம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

2006-07 விற்பனைத் திருவிழாவின் போது 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். இத்திருவிழாவையட்டி குளோபல் கிராமம் ( Global Village ) ஏற்படுத்தப்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை உலக மக்கள் கண்டு களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது மற்றொரு சிறப்பம்சமாகும்.

 

 

 

 துபாயில் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க உதவும் இணையத்தளம்

 

துபாயில் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் கீழ்க்கண்ட இணையத்தளம் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

www.labourcomplaints.ae 

 

புகார் தெரிவிக்க தொலைபேசி எண் : 800 9119 மேலும் தங்குமிட வசதி குறைபாடு, சம்பளம் தராமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

 

 

 

 துபாய் குறித்து அறிய உதவும் இணையத்தளம்

 

www.dubai.ae எனும் இணையத்தளம் துபாய் குறித்து பல்வேறு தகவல்களை அறிய உதவுகிறது.

 

இவ்விணையத்தளத்தில் துபாய் குறித்த தகவல்கள், விசா பெறும் வழிமுறைகள், மின் இணைப்பு பெற இணையவழி விண்ணப்பம், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீட்டுவசதித்துறை, சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சேவைகளை மின்னஞ்சல் வாயிலாகப் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.

 

இணையம் வழி சேவைகளைப் பொதுமக்கள் உபயோகித்து தங்களது நேரத்தை சேமிக்க துபாய் அரசு இத்தகைய சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

 

 

 

 இளைய தலைமுறையினரைக் கவரும் ஷேக் முஹம்மத் இணையத்தளம்

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர், துபாய் ஆட்சியாளர் என முப்பெரும் பொறுப்புகளை வகித்து வருபவர் மேன்மை மிகு ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம். புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள www.sheikhmohammed.co.ae எனும் இணையத்தளம் இளைய தலைமுறையினரை பெருமளவு கவர்ந்துள்ளது.

 

இவ்விணையத்தளத்தில் ஷேக் முஹம்மத் அவர்கள் கலந்து கொண்ட செய்திகள், சிறப்புக்குறிப்புகள், வரலாறு, கவிதை, படிப்பு, விருதுகள், வரலாறு, சுற்றுலா, ஊடகம், வீடியோ உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் காணப்படுகின்றன.  இணையத்தளத்தை பார்வையிடுவோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷேக் முஹம்மத் சிறந்த ஆட்சியாளராக மட்டுமல்லாது ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவரது கவிதைகளும் இவ்விணையத்தளத்தில் காணப்படுகின்றன.

 

 

 

 அமீரகத்தை வெளுத்து வாங்கிய மழை

 

15-01-2008

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மழையினால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

 

அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். வேலைக்குச் சென்ற பலர் வீடு திரும்பமுடியவில்லை. பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சிக்னல்கள் வேலை செய்யாததால் காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர். 

 

ஷார்ஜாவில் இருந்து துபாய் செல்ல மூன்று  மணி நேரத்துக்கும் மேல் ஆனதாக  பயணிகள் தெரிவித்தனர்.                 நன்றி: gulfnews 

 

 

 

 சலாஹூதீனுக்கு துபாய் ஈமான் அமைப்பு வாழ்த்தரங்கம்

 


செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 18, 2007  

 

துபாய்: மத்திய கிழக்கு ஆசிய வளர்ச்சிக்கு உதவிய சிறந்த தொழிலதிபருக்கான விருது பெற்ற ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சையத் எம்.சலாஹூதீனுக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் வாழ்த்தரங்கம் நடந்தது. மேரியாட் ஹோட்டலில் நடந்த இந்த விழாவில் ஈமான் அமைப்பின் விழாக் குழு செயலாளர் காயல் யஹ்யா முஹய்தீன் இறை வசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாகத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துல் ரஹ்மான் ஈமான் அமைப்பு மேற்கொண்டுவரும் சமூக மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவரித்தார்.  துபாய்க்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி பி.எஸ். முபாரக் பேசுகையில், சலாஹூதீன் அவர்கள் பரபரப்பு மிகுந்த துபாயில் அமைதியான மனதுடன் ஒரு இளைஞரைப் போன்று தொழில் மற்றும் சமூக சேவையில் சாதனை படைத்து வருகிறார் என்றார்.

ஈமான் அமைப்பின் கல்விக்குழுத் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, அபுதாபி அய்மான் சங்கத்தின் ஹமீதுர் ரஹ்மான், உலக தமிழ்ப் பண்பாட்டுக்கழக் நிர்வாகி முனைவர் ரபியுத்தீன், நம்ம ஊரு செய்தி ஆசிரியர் முனைவர் அ.அயூப், சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன்,

ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம், துபாய் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பெண்கள் சங்கம், அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை, தாய்மண் சர்வதேச அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் வாழ்த்துரை வழங்கினர்.  பின்னர் சலாஹூதீன் பேசுகையில், தனக்கு இத்தகைய விருது கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.

விழா நிகழ்ச்சியினை ஈமான் அமைப்பின் கல்விக்குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அப்துல் கத்தீம், அஷ்ரப் அலி, மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், இஸ்மாயில் ஹாஜியார், ரமேஷ், பிரசன்னா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

 

 

 

 துபாய் போலீஸின் மின்னல் வேகம்

 

சனிக்கிழமை, டிசம்பர் 15, 2007  
 

துபாய்: துபாயில், ஏடிஎம் மையத்தில் உள்ள எந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பத்து லட்சம் திர்ஹாம் பணத்தைத் திருடிய 2 பேரை 6 மணி நேரத்தில் துபாய் போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். கருவியில் பணம் தீர்ந்து விட்டதால் அந்த வங்கியின் ஊழியர்கள் பத்து லட்சம் திர்ஹாம் பணத்துடன் ஏடிஎம் மையத்திற்குச் சென்றனர். அப்போது இரண்டு பேர் வங்கி ஊழியர்களிடமிருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடினர். இதையடுத்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட துபாய் போலீஸார் அந்த இருவரையும் 6 மணி நேரத்தில் வளைத்துப் பிடித்து விட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கனடா பாஸ்போர்ட் வைத்திருந்தனர். ஓமன் நாட்டு காவல்துறை உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்ததாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசிய தொழிலதிபர் போட்டி- இறுதிச் சுற்றில் சையத் சலாஹூதின்

 

திங்கள்கிழமை, நவம்பர் 12, 2007       
 

துபாய்: வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசிய தொழிலதிபரை தேர்வு செய்ய நடந்து வரும் ஆன்லைன் வாக்கெடுப்பில் (ABA ME) தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனங்களின் அதிபருமான சையத் முகம்மத் சலாஹூதின் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

கீழக்கரையைச் சேர்ந்த சலாஹூதின் வளைகுடா உள்பட உலகின் 20 நாடுகளில் பரந்து விரிந்துள்ள ஈடிஏ தொழில் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக உள்ளார். 5 பில்லியன் டாலர் வர்த்தகத்துடன் 60,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

 

இந் நிலையில் வளைகுடாவின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய ஆசிய தொழிலபர்கள் யார் என்ற ஆன்லைன் வாக்கெடுப்பில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ளார் சலாஹூதின். ஒருமாத காலம் நடந்த இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, நடுவர் குழுவினர் பல்வேறு ஆய்வுகள்-ஆலோசனைகளை நடத்தியும், தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் செய்தும் இறுதிச் சுற்றுக்கு தொழிலதிபர்களை தேர்வு செய்துள்ளது.

 

தொழிலில் அதிக லாபம் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்துறை வெற்றியோடு சமூகத்துக்கு செய்த சேவைகள், நாட்டின் வளர்ச்சிக்கும், தொழிலாளர் முன்னேற்றத்துக்கு செய்த பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

இதில் வளைகுடாவின் வளர்ச்சிக்கு உதவிய மிகச் சிறந்த ஆசியர் (Outstanding Asian Contribution to the ME Development) மற்றும் மிகச் சிறந்த ஆசிய தொழிலபதிபர் (Asian Business Leader of the Year) ஆகிய பிரிவுகளின் கீழ் இறுதிச் சுற்றுக்கு சையத் சலாஹூதின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து வளைகுடாவில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழரும் தொழில்துறை நிர்வாகியுமான எம்ஜேஎம் இக்பால் கூறுகையில், கூர்மையான தொழில் அறிவும், செய்யும் தொழிலில் நேர்மையும், எளிமையும், தொழிலாளர்களுடன் அன்புடன் பழகும்தன்மையும் வாய்ந்த சலாஹூதின் இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை என்றார்.

 

வரும் டிசம்பர் 1ம் தேதி வரை கிடைக்கும் ஆன்லைன் வாக்குகள், எஸ்எம்எஸ்களின் அடிப்படையில் வெற்றியாளர் இறுதி செய்யப்படுவார்.

 

தமிழரான சையத் சலாஹூதின் வெல்ல, வாழ்த்தி துணை நிற்போம்.

 

 

 வளைகுடா நாடுகளின் ஒற்றுமைக்கு அடித்தளமிடும் தொடர்வண்டி!

 

 31 அக்டோபர் 2007

 

அரபு அமீரக ஒன்றியத்தில் விரைவு ரயில் போக்குவரத்துச் சேவைக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த வருடத்தின் துவக்கத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமீரக மக்களிடையே கடுமையான தலைவலியை ஏற்படுத்தி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள 800 கிலோமீட்டர் நீளமுள்ள இப்பணி வரும் 2013 க்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதன்மூலம் பயணிகளுக்காகவும் சரக்குகள் போக்குரத்திற்காகவும் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை சாலைகளில் பெருமளவில் குறைந்து, போக்குவரத்து சீராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தத் திட்டம் அமீரகத்தில் நிறைவு பெற்றப் பின்னர் ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும். GCC நாடுகளை ஒன்றினைக்கும் ஆயிரம் கி.மீ நீளமுள்ள மாபெரும் திட்டம் ஒன்றை 2010 ல் செயல்படுத்தவும் இது தயாராக இருக்கும்.

ஜெர்மனியின் ரயில்வே கூட்டமைப்பு ஒன்று இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்து, அதற்கான முழு திட்டவரைவு ஒன்றை வரைந்து சமர்ப்பித்துள்ளதாக இந்தத் திட்டத்தில் பணியாற்றும் ஓர் அலுவலர் கூறுகிறார். அமீரக அதிபரின் முழு சம்மதத்தையும் பெற்ற இத்திட்டம், முழு மூச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாகச் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த மாபெரும் திட்டப் பணிக்கான செலவின மதிப்பு இன்னும் முழுமையாக வெளியாகாத சூழலில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (11 பில்லியன் திர்ஹம்கள்) வரை செலவாகக் கூடும் என்று செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் சிமெண்ட், கற்கள், மணல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவையும் இந்தத் தொடர்வண்டிகள் உரிய இடங்களுக்குக் கொண்டுச் சேர்க்கும்.

அபூதபிக்கும், சவூதி அரேபியாவிற்கும் இடைப்பட்ட எல்லைப்பகுதியில் துவங்கும் இப்பணி முழு அமீரகத்தையும் இணைக்கும். தூரத்தினையும், போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு நெருக்கியடித்து நகரத்திற்குள்ளாகவே குடியிருக்கும் மக்களின் சிரமமான மனோநிலையை இத்திட்டம் மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு அரபு நாடுகள் தங்களிடையே ஒன்றிணைந்து முன்செல்லத் துவங்கியிருப்பதன் அடையாளமாக, GCC உறுப்பினர்களாகிய அனைத்து அண்டை நாடுகளும் இத்திட்டத்தில் முழு ஒற்றுமையுடன் இணைந்து தங்களது ஒத்துழைப்பினை அளிப்பதாக உறுதி கூறியுள்ளன. இந்நிலையில் இதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களையும் முயற்சிகளில் அனைத்து வளைகுடா நாடுகளும் ஈடுபட்டு வருவதாகக் கூறி நம்பிக்கையூட்டுகிறார் உலக வங்கியின் தேசிய ரயில்வே போக்குவரத்துத்துறைத் தலைவருமான ரமிஜ் அல் அஸ்ஸார். நேற்று நடந்த மத்திய கிழக்கு இரயில் திட்டங்களுக்கான 2007 ஆம் ஆண்டின் மாநாட்டில் (30-10-2007) பேசியுள்ள அவர் Sistra, Canarail and Khatib Al Alami ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன என்றும், அந்நிறுவனங்கள் 2009 ஆம் ஆண்டிற்குள் முழுமையான திட்டவரைவினை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

1000 கிலோமீட்டர்கள் வரை நீட்டிப்பு செய்யப்படவிருக்கும் இப்பணி வளைகுடா நாடுகளின் கடற்கரைப் பிரதேசங்களில் அமையவுள்ளது. இன்ஷா அல்லாஹ், இப்பணி நிறைவுற்றால் இதில் 180 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் ரயில்களானது, ஒமானின் மஸ்கட்டில் துவங்கி அமீரகம் முழுவதும் பரவி கத்தர் மற்றும் சவூதி அரேபியாவைக் கடந்து குவைத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒமான் நாட்டினுள் அடுத்த 1000 கி.மீ தொலைவில் செய்யப்படும் விரிவாக்கம் பற்றி எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள GCC உச்சி மாநாட்டில் அலசப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கு அரபு நாடுகளை ஒன்றிணைய விடாமல் அவர்களின் பெட்ரோல் வளத்தின் மீது தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதில் போட்டியிட்டுச் செயலாற்றும் இஸ்ரேலிற்கும், அதற்கு எல்லா வகையிலும் துணைபுரியும் மேற்குலகிற்கும் அரபு நாடுகளின் எதிர்காலத்தை நோக்கிய இத்திட்டமிட்ட ஒருங்கிணைந்த செயல் திட்டம் வயிற்றில் புளியைக் கரைக்கும். அது அரபு நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் காய்களை நகர்த்தும் என்பதையும் அரபு நாடுகள் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தது போல் ஒற்றுமையுடன் முன்செல்லத், திட்டங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது முஸ்லிம் உலகின் எதிர்பார்ப்பாகும்.

 

வளைகுடா நாடுகளில் தற்போது சவூதி அரேபியாவில் மட்டுமே தம்மாமிற்கும் தலைநகர் ரியாதிற்கும் இடையே ஒரு நாளைக்கு நான்கு முறை ரயில் போக்குவரத்துச் சேவை நடைபெற்று வருகிறது என்பது தனித் தகவல்.

                                      நன்றி: சத்தியமார்க்கம்.காம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

© 2003 MIWA-UAE  |  [email protected]  |  designed by Jana Kuraishe

Hosted by www.Geocities.ws

1