உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருவள்ளுவர் சித்தாந்த சைவர்

(கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள்)

திருவாவடுதுறை ஆதீனம்

   முதற்பதிப்பின் பதிப்புரை:

    சமய உண்மைகள் அறிவு அளவாக ஆராயும் போது அறிவு நிலையாகும்; உணர்வு அளவாக நுகரும் போது உணர்வு நிலையாகும்.

    திருவள்ளுவர் அருளிச் செய்த நூல் திருக்குறள்; திருவள்ளுவரைப் பற்றி ஆராய்வதற்கு இந்த நூல் ஒன்று தான் சான்றாய் உள்ளது.  இருந்தாலும், இது, வலிய அகச்சான்றாய் உதவும்.

    அறிவு ஆராய்ச்சியால் திருக்குறளைச் சிந்தித்து 'திருவள்ளுவர் சமயம் எத' என்பதை வடநூற் புலமையோடு சித்த மருத்துவத்திலும், தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், மெய்கண்ட சாத்திரங்களிலும் நிரம்பிய புலமையுடைய கொரடாச்சேரி திருமடத்தின் தலைவர், சிவத்திரு வாலையானந்த அடிகளார் இந்நூலில் முடிவு செய்திருக்கிறார்கள்.  எழுதுவதற்கும் பேசுவதற்கும் அறிவு நிலையே உதவுமாதலால், திருக்குறளிற் சிந்தனை இன்றியமையாததாயிற்று.

    'திருக்குறள்' ஒருமறை நூல்; சமய நிலைக்கு அணுக்கமானது; பொதுமறையாய், மக்கள் வேதமாய், உலகுக்கெல்லாம் தனிச்சிறப்பான ஒன்றாய், அது விளங்குகிறது.  அதன் ஆசிரியர் திருவள்ளுவர், தம் வாழ்க்கைத் திளைப்புக்கு ஏதேனும் ஒரு சமயத்தின் வழியே நின்றிருக்கவேண்டும்; ஒரு நெறியையும் பின்பற்றாமல் உலகப் பெரியோர் யாரும் இரார்.

    சமய நெறிகளில், 'சைவ சமயம' என்பது, மற்ற எல்லாச் சமயங்களின் உண்மைகளையும் தன்னுட் கொண்டிருக்கிறது; அல்லாமலும், மற்றச் சமயங்களில் வராத உண்மைகளையும் சைவ சமயம் பெற்றிருக்கிறது.  இப்படி இது நிறைவான சமயமாயிருக்கிறது.  மேலும், உலகு முழுவதும் கடைப்பிடிக்கும்படி, பொது நெறியாகவும் சைவ சமயம் விளங்குகிறது; இந்தியச் சமயங்களேயன்றி உலகச் சமயங்கள் அனைத்தும் இச்சைவ சமயத்தில் அடங்கி விடுகின்றன.  இவ்வாறு சிறந்த இச்சிவ நெறிக்குச் 'சித்தாந்த சைவம' என்பதும் ஒரு பெயர்; 'சித்தாந்தம்' என்றே சொல்வதும் உண்டு.

    சிவநெறியாளர் இங்ஙனம் உலகப் பொது நிலையாளர் ஆகின்றனர்; அவர்கள் சிவநெறியும் உலகப் பொது நிலையில் திகழ்கிறது.  இச்சிறப்புகட்குரிய காரணங்களும், திருவள்ளுவர் சிவநெறியைச் சேர்ந்தவர் என்பதற்கான குறிப்புக்களும், இச்சிறு நூலில் விளக்கமாக வருகின்றன.

    16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த சைவ எல்லப்ப நாவலர் தாம் இயற்றியருளிய திருவருணைக் கலம்பகத்தில்,

    சைவத்தின் மேற்சமயம் வேறில்லையதிற் சார்சிவமாம்
    தெய்வத்தின் மேற் றெய்வமில்

என்ற கட்டளைக் கலித்துறைப் பாலில் குறிப்பிட்டுள்ள கருத்து இந்நூலுக்கு அரண் செய்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

    'சித்தாந்த நூல்கள்' எழுந்த காலத்திலும் முன்னும், மக்கள் பலவகையாக, உலகத்தைத் தத்தம் அறிவால் ஆராய்ந்து பார்த்திருக்கின்றனர்.  கடவுளைப் பற்றியும் உயிரைப் பற்றியும் மலங்களைப் பற்றியும் ஒவ்வொரு வகையாக முடிவு செய்திருக்கின்றனர்.  உலகாயதர், புத்தர், சமணர், மாயாவாதியர், பாஞ்சராத்திரிகள், ஐக்கியவாதிகள், பாடாணவாதிகள் முதலிய பல சமயத்தாராக அவர்கள் விளங்கினர்.  அக்காலத்தில் இருந்த பெரியவர்கள், எல்லாச் சமயங்களையும், 'புறம்புறம்', 'புறம்', 'அகப்புறம்', 'அகம்' என்று நான்கு வகையாகப் பாகுபாடு செய்து 24 பிரிவுகளில் அடக்கினர்; 'கிறித்துவம்', 'மகமதியம்' முதலிய பிற்காலச் சமயங்களும் இவற்றில் அடங்கிவிடும்.  இந்த 24 சமயங்களுக்கு வேறாக எந்தச் சமயக் கொள்கைகளும் உலகத்தில் இல்லை, முன்னும் இல்லை; பின்னும் இல்லை; 'சித்தாந்த சைவம்' ஒன்றே, இந்த 24 சமயங்களுக்கும் அப்பாற்பட்டதாய்த் தனி நெறியாய்த் திகழ்கிறது!

    சமய நெறிகள், கொள்கையும் (தத்துவம்) ஒழுக்கமும் (ஆசாரம்) எனப் பொதுவாக இருவகைப்படும்.

    'திருவள்ளுவர் சித்தாந்த சைவர்' என்னும் இந் நூலில் 24 சமயக் கொள்கைகளையும் ஒழுக்கங்களையும் எடுத்து, முறையே திருக்குறள் மறுப்பதையும், அவையெல்லாவற்றிற்கும் மேற்பட்ட உண்மைகளைத் தன்னுட் கொண்டு விளக்குவதையும், நூலாசிரியர், காரண காரியங்களுடன் விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.  நடுநிலையோடு அனைவரும் கருதிப் பார்க்கலாம்; உண்மை விளங்குவது கட்டாயமானது; 'பொது உண்மைகளைச் சொல்லுகிறவர்கள், தம் வாழ்க்கையில் ஒரு சமயத்தையும் சார்ந்திரார்' என்று தக்கோர் யாரும் கொள்ளார்.

    கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் 1926-27 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி நான்காஞ் சிலம்பில் இந்த நூலினை மூன்று இதழ்களில் எழுதியுள்ளார்கள்.  இந்நூற் கருத்துக்களை இக்கால மக்களும் அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்ற எண்ணத்தோடு சிலர் வேண்டுகோளுக்கிணங்கித் தனி நூலாக இதனை வெளியிட்டிருக்கிறோம்.

    தமிழ் இலக்கண இலக்கியங்களிற் சிறந்த புலமையும் சைவ சித்தாந்த நுண்பொருள்களோடு சமய நூற் புலமையும் மிக்க வரும் மறைமலையடிகளின் மாணவரும் ஆகிய தவத்திரு அழகரடிகள் அவர்களிடம் இந்நூலினை வெளியிடும் கருத்துப் பற்றி யாங்கள் தெரிவித்தபோது, இப்பணி சாலச்சிறந்ததென்றும், இன்றியமையாத நுண்கருத்துகள் இந்நூலின்கண் உள்ளனவென்றும், தமிழ் மக்கள் உண்மையுணர்தற்கு இந்நூல் வழியாகுமென்றும் எடுத்துக் கூறி, இதனை வெளியிடுதற்கு ஏற்பச் செவ்விதாக்கித் தந்தனர்.  அவர்களுக்குக் கழகத்தின் நன்றி என்றும் உரியதாகும்.

    சென்னை, நுங்கம்பாக்கத்தில் 'திருவள்ளுவர் கோட்டம்' அழகாகவும் மேம்பாடாகவும் தோன்றித் திருக்குறளை மேன்மேலும் ஆராய்ந்து வருகிறது; திருக்குறள் இன்ன கோட்பாட்டுக்கு உரியது, என்பதைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஆராய்ச்சியாளர்க்கு எடுத்துக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது.  'திருவள்ளுவர் சித்தாந்த சைவரே' என்று, ஆராய்ச்சிக்கு விருந்தாக நடுநிலையாளரை நோக்கி, இந்நூல் ஆக்கப்பட்டிருப்பதனால், இதனை வெளியிட விரும்பினோம்.  ஆராய்வார்க்குப் பயன்படுதலோடு திருவள்ளுவரின் விளக்கத்துக்கும் இது சிறப்புத் தரும் என்று நம்புகிறோம்.

    அறிஞர்களும், அன்பர்களும் இதனை வாங்கி ஆராய்வதுடன் அடுத்த தலைமுறைக்கும் பயன்படும்படி கல்விச்சாலை இளைஞர்களுக்கும் உதவும்படி செய்ய வேண்டுகிறோம்.

 

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

1976.


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

பதிப்புரை

 

    அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ச் சச்சிதானந்தமாய் விளங்கும் பரசிவன், ஆன்மாக்கள் உய்ய வேத சிவாகமங்களை அருளிச் செய்தான்.  தெய்வக் கோட்பாடுகளை ஆராய முற்பட்டவர்கள் தத்தம் ஞான வரம்புக்கு ஏற்ப வேத சிவாகமங்களை ஒட்டியோ மறுத்தோ வெவ்வேறு முடிபுகளைக் கண்டு அவற்றைப் பரப்பி வந்தனர்.  இத்தகைய முடிவு வேறுபாடுகளால் சமயங்கள் பலவாயின.

    சிவஞானம் முதிர்ந்த சான்றோர்கள் அச்சமயங்களை 24 ஆக வகைப்படுத்தினர்.  அவற்றுள்ளே சைவ சித்தாந்தப் பேருண்மையை வெளிப்படுத்தி மெய்கண்ட சாத்திரங்களையும் பண்டார சாத்திரங்களையும் அருளிச் செய்தனர்.

    இந்நிலையில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைப் பொது மறை என்றும், தத்தம் சமய நூல் என்றும் ஒரு சிலர் சான்று காட்டி எழுதியும் பேசியும் வந்தனர்.  பஞ்சாக்கரபுரம் ஸ்ரீவாலையானந்த சுவாமிகள், திருக்குறளை நுணுகி ஆராய்ந்து, அதனை இயற்றிய திருவள்ளுவர் சித்தாந்த சைவரே என்ற முடிவுக்கு வந்து இதனை உலகறியச் செய்ய வேண்டும் என்று கருதி கட்டுரைகள் இயற்றினார்கள்.  திருவள்ளுவர் ஏனைய புறச் சமயத்தவரல்லர் என்பதை திருக்குறள் சான்றுகளால் நிறுவியும், திருவள்ளுவர் சித்தாந்த சைவரே என்பதையும் திருக்குறள் சான்று கொண்டு வலியுறுத்தியும் அக்கட்டுரைகளை எழுதினார்கள்.  அந்த கட்டுரைகள் 1926-1927 ஆம் ஆண்டுகளில் செந்தமிழ்ச் செல்வி என்னும் பத்திரிகையில் மூன்று இதழ்களில் வெளிவந்தன. பின்னர் 1976ஆம் ஆண்டில் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தால் ஒரு நூலாக வெளியிடப்பெற்றது.

    சந்தானசாரியாருள் முதலாமவரும், சிவஞான போதம் என்னும் சாத்திர நூலை அருளியவருமான அருள்திரு மெய்கண்ட தேவரின் குருபூசை விழா, அவரது அவதாரத் தலமாகிய பெண்ணாகடத்திலும், சிவானந்தப் பேறு பெற்ற திருவெண்ணெய் நல்லூரிலும் ஆண்டுதோறும் முக்தித் திருநாளாகிய ஐப்பசி - சுவாதி தினத்தன்று ஆதீனத்தால் அபிடேக ஆராதனை, நூல் வெளியீடு, சாத்திர சொற்பொழிவு நிகழ்வுகளுடனும் இரவு மெய்கண்டார் திருவீதியுலாவுடனும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    திருவெண்ணெய்நல்லூரில் 1951 முதல் 1969 வரை 19 ஆண்டுகள் மெய்கண்டார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று சித்தாந்த சைவமாநாடுகளும் நூல் வெளியீடுகளும் நடைபெற்று வந்தன.

    அருள்மிகு மெய்கண்டார் திருக்கோயிலில் சிவாசாரியார்களைக் கொண்டு ஆறுகால யாகபூஜைகளை செய்வித்து, 19.6.1994-ல் சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்கள் தமது திருக்கரங்களால் கும்பாபிஷேகம் சிறப்புடன் செய்தருளினார்கள்.

    மெய்கண்டார் அருளிய சிவஞானபோத செம்பொருளை யாவரும் அறிந்து பயன்கொள்ளும்வண்ணம் சீர்வளர்சீர் குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாணைவழி திருவாவடுதுறை ஆதீனம் சைவசித்தாந்த நேர்முக பயிற்சி மையம் என்ற அமைப்பு 12 ஆண்டுகளாக செயலாற்றி வருகிறது.  இம்மையத்தின் மூலம் இதுவரை 5250 மாணவர்கள் பயிற்சி பெற்றும், தற்சமயம் 4280 மாணவர்கள் பயிற்சியிலும் உள்ளனர்.

    சென்ற சில ஆண்டுகளில் சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்கள் அருளாணையின்வண்ணம் இக்குருபூசை தினத்தன்று (1) Theology of Tamil (2) சிவஞானபோதம் (3) அஷ்டபிரகரணம் 5,6 (4) குண்டவிதி (5) திருக்குறள் பொது நூலா? முதலிய நூல்கள் வெளியிடப்பெற்றுள்ளன.

    இவ்வாண்டு குருபூசை விழாவில் (ஐப்பசி - சுவாதி) விசு ஆண்டு ஐப்பசித் திங்கள் 28ஆம் நாள் (14.11.2001) புதன்கிழமையன்று திருவாவடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்களின் அருளாணையின்வண்ணம் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் இந்நூல் மறுபதிப்பாக வெளியிடப்பெறுகிறது.

    சைவ மெய்யன்பர்களின் இவ்வாதீன வெளியீடாகிய இந்நூலைப் பெற்றுப் பயின்று நலம் பெறுவாராக.

 

திருவாவடுதுறை ஆதினம்.


திருவள்ளுவர் சித்தாந்த சைவர்

 

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

    கடவுளால் உதவப்பட்ட உடல் கருவி உலக (தநு கரண புவன) போகங்களை அடைந்த ஆன்மாக்கள், தமது வினைக்கீடாகப் பல திறப்பட்ட அறிவு விளங்கப்பெறும் (பல அறிவு) பேதத்தால் உயிர்கள் நுகரும் இன்ப நிலைகளும் பல திறப்படும்.  அவ்வின்ப நிலைகளையடைந்து இன்ப நுகர்ச்சியுறுங் காலமே 'சமயம்' எனப்படும்.

    சமயம் புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என நான்கு வகைப்படும்.

புறப்புறச் சமயமாவது, வேத சிவாகமங்களையும், அவற்றின் விதி விலக்குகளையும் உடம்படாது, சிறிது கால இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.

புறச்சமயமாவது, சிவாகமங்களை உடம்படாது, வேதத்தை மட்டும் உடம்பட்டு, அதிற் கூறப்படும் நிலையில்லாத இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.

அகப்புறச் சமயமாவது, வேத சிவாகமங்களை உடம்பட்டு, அவற்றோடு ஓரோர் காலங்களில் மோகத்தினாற் சில உயிர்கள் செய்த 'தந்திர' கலைகளையும் உடம்பட்டு, அவற்றிற் கூறப்படும் நிலையில்லாத இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.

அகச் சமயமாவது, வேத சிவாகமங்களை உடம்பட்டு, இன்ப நுகர்ச்சி முறையில் பேதப்படும் இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.

புறப்புறச் சமயங்கள்:

    உலோகாயதம், புத்த பேதங்கள் நான்கு, சமணம் எனும் ஆறும் அவற்றின் உட்பிரிவுகளுமாம்.

உலோகாயதத்தின் உட்பிரிவுகள்:

    உடலே உயிர் என்னும் (தேகான்ம) வாதம், பொறிகளே உயிர் என்னும் (இந்திரியான்ம) வாதம், மூச்சை உயிர் என்னும் (பிராணான்ம) வாதம் என்பன.

புத்த பேதங்கள் நான்காவன:

    மாத்தியமிகம், யோகாசாரம், செளத்திராந்திகம், வைபாடிகம் என்பன.

சமணத்தின் உட்பிரிவு:

    நிகண்ட வாதமாம்.

புறச் சமயங்கள்:

    தருக்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், யோகம் பாஞ்சராத்திரம் எனும் ஆறும் அவற்றின் உட்பிரிவுகளுமாம்.

தருக்கத்தின் உட்பிரிவுகள்:

    வைசேடிகம், நையாயிகம் என்பன.

மீமாஞ்சையின் உட்பிரிவுகள்:

    பட்டம், பிரபாகரம் என்பன.

ஏகான்ம வாதத்தின் உட்பிரிவுகள்:

    மாயாவாதம், பாற்கரிய வாதம், கிரீடாப் பிரமவாதம், சத்தப் பிரமவாதம் என்பன.

அகப்புறச் சமயங்கள்:

    பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் ஐக்கவாத சைவம் என ஆறு.

அகச் சமயங்கள்:

    பாடாணவாத சைவம், பேதவா சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுரவவிகாரவாத சைவம், சிவாத்துவிதவாத சைவம் என ஆறு.

    இங்ஙனங் கூறிய சமய பேதங்களுள் நம் திருவள்ளுவ நாயனார் எச்சமயத்தைச் சார்ந்தவர் என ஆராய்வோம்.

 

(1) 'உலோகாயதர்' அல்லர்

    (1) உலோகாயதர்கள் காட்சியளவை ஒன்றே கொள்வர்; கருதல் (அனுமானம்) உரை என்னும் அளவைகளை உடம்படார். நம் நாயனாரோ,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்றும்,

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.                        338

என்றும்,

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு.                           1013

என்றும்,

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.                    1122

என்றுங் கூறுமாற்றால் காட்சியளவை, கருதல் அளவைகளையும்,

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.                        610

என்று கூறுமாற்றால் அவர் உரையளவையையும் உடம்படுகின்றார்.

    (2) உலோகாயதர் காட்சியளவைக் கெய்துகின்ற நிலம், நீர், தீ, வளியெனும் நான்கு பூதங்களையே கொள்வர்.  நாயனார்.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.                              271

என்று கூறுமாற்றால் ஐம்பூதங்கள் உண்டெனக் கொள்கின்றார்.

    ஆகையால் நாயனார் 'உலோகாயதரல்லர்' என்பதொருதலை.

 

(அ) 'உடலே உயிர்' என்பர் அல்லர்

 

    (1) உடலே உயிரென்பவர் உடலே ஆன்மா என்றும், உடலின் வேறாய் ஆன்மா இல்லை என்றுங் கூறுவர்.  நம் பொய்யில் புலவர்,

 

அவிசொரிந் தாயிரம் வேண்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.                  259

என்றும்,

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.                      338

என்றும் கூறுமாற்றால் தேகத்தின் வேறாய் உயிருண்டென்பதை அவர் உடன்படுகின்றார்.

 

    (2) உடலே உயிர் என்பவர்கள் தாயையும் தந்தையையுமே தெய்வமாகக் கொள்வர்

 

    நாயனார் ஆதிசத்தியோடு கூடிய பகவனாகிய சிவபரம்பொருளைத் தெய்வமாகக் கொண்டு வாழ்த்துக் கூறினார்.  ஆகலின் நாயனார் உடலே உயிர் என்பவரல்லர்.  ஆதியாகிய தாயையும் பகவனாகிய தந்தையையும் கூறி வழிபட்டார் எனச் சிலர் கூறுவர்.   உலக முதலாவான் ஆதிபகவனென உவமையுடன் கூறியதனால், ஆதிபகவனென்ற சொற்கள் தாய் தந்தையை உணாத்தின் உவமையுடன் ஒருவாற்றானும் பொருந்தாது.

    சீர்கொளிறை யொன்றுண்டத் தெய்வநீ யென்றொப்பாற்
    சோர்விலடை யாற்றெளிந்தோம் சோமேசா

என்ற முதுமொழி அகர முதல எழுத்தெல்லாம் என்ற ஒப்பினாலும், ஆதி யென்ற அடையினாலும் உலக முதற்பொருள் சிவபரம் பொருளேயென முதல் திருக்குறள் உணர்த்துகின்றது என கூறுகின்றது.  'பகவன்' என்ற சொல் மாயோன் முதலியோரையும் குறிக்குமாகலின், அவர்பாற் செல்லாது, சகத்துக்கு நிமித்த காரணனாகிய பதிப்பொருளை யுணர்த்தும் பொருட்டு, ஆதியென்ற அடை கொடுக்கப்பட்டது.  அதனை மேலும் மேலும் வலியுறுத்தவே, "வாலறிவு" "வேண்டுதல் வேண்டாமை யின்மை" "தனக் குவமை யின்மை" "அறவாழி யந்தணனாந் தன்மை" "எண்குணமுடைமை" முதலிய தெய்வ குணங்களை விதந்தெடுத்து வகுத்துந் தொகுத்தும் ஓதப்பட்டது.  ஆதலால், அவர் கூற்றுப் போலியென்றுணர்க.

(ஆ) 'பொறிகளே உயிர்' என்பவர் அல்லர்

    பொறிகளே ஆன்மா என்போர், மெய், வாய், கண், மூக்குச், செவியென்னும் ஐந்து பொறிகளை சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் எனும் ஐம்புலன்களை நுகர்தலால் அவ்வைம் பொறிகளே ஆன்மா என்பர்.  நம் பொய்யில் புலவர்,

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர்                      24

என்றும்,

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விகம் புளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி                             25

என்றும்,

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு                     27 

என்றும் கூறுமாற்றால் ஐம்பொறிகளுக்கு வேறாக உயிருண்டென்பதை உடம்படுதலால், அவர் 'பொறிகளே' உயிர் என்பவர் அல்லர்.

 

(இ) 'மூச்சே உயிர்' என்பவர் அல்லர்

    மூச்சே உயிர் என்போர்.  மூச்சு உடம்பில் நின்று இயங்குங்கால் உடம்பில், உணர்ச்சியிருந்தும், பிரித்த போது உணர்ச்சியில்லாமலும் இருக்கக் காண்பதனால் மூச்சே உயிர் என்பர்.  நம் செந்நாப்போதார் தமது தெய்வ நூலில்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.            107

என்றும்,

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.           1315

என்றுங் கூறி, மறு பிறப்புக்கள் உண்டென்று நிறுவுவர்; அதனால், எடுத்த பிறப்பின்பாற்பட்ட ஐம்பூதங்களிலொன்றாகிய காற்றின் கூறான மூச்சை உயிரெனக் கொள்ளும் 'மூச்சான்மவாதி' அல்லர்.

(2) 'பெளத்தர்' அல்லர்

    பெளத்தர், ஞானத்தின் வேறாய்க் கடவுளின் றென்றும், ஞானமே ஆன்மாவென்றுங் கூறுவர்; அவர்கள் பதமுத்திகளுண்டெனக் கொள்வதில்லை.  திருவள்ளுவ தேவர்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.                        3

என்னுந் திருக்குறள்களால் ஞானத்தின் வேறாய்க் கடவுளுண்டென்றும்,

அறிதோறு அறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.                   1110

என்னுந் திருக்குறளால் ஞானத்தின் வேறாய் ஆன்மா வுண்டென்றும்,

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.                      1103

என்னுந் திருக்குறளால் பதமுத்தித் தானங்களாகிய மேலுலகங்களுண்டென்றும் கூறுவதனால், திருவள்ளுவ தேவர் 'பெளத்தர்' அல்லர்.

(அ) 'மாத்தியமிகர் (சூனியவாதி)' அல்லர்

    மாத்தியமிகர் உலகத்துப் பொருள்கள் அகப்பொருள் புறப்பொருள் என இருதிறப்படுமென்றும், அவ்விரு திறப்பொருள்களும் உள்ளவும், இல்லவும், உள்ளவுமில்லவும், இரண்டு மல்லவுமாகிய நான்குமில்லை யாகலான் சூனியமென்றும், மயக்கத்தால் உள்ளனபோல் தோன்றுகின்றன வென்றுங் கூறுவர்.  நாயனார் தமது வாயுறை வாழ்த்தில்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்ற முதற்றிருக்குறளாலேயே உலகு உண்டென்றும், அதற்கு ஒரு முதல் உண்டென்றும் உடம்படுகின்றதனால் சூனியவாதியாகிய 'மாத்தியமிகர்' அல்லர்.

(ஆ) 'யோகாசாரர் (விஞ்ஞானவாதி)' அல்லர்

    யோகாசாரர், அகப்பொருளாகிய ஞானம் உண்டென்றும், புறப்பொருள்கள் சூனியமென்றுங் கூறுவர்.  பொய்யில் புலவர்,

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.             751

என்றும்,

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.                        754

என்றும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்றும் வருந் திருக்குறள்களால் புறப்பொருள்களுண்டெனக் கொள்வதனாலே, புறப்பொருள்களெல்லாம் சூனியம் என்கின்ற விஞ்ஞானவாதியாகிய 'யோகாசாரர்' அல்லர்.

(இ) 'செளத்திராந்திகர்' அல்லர்

    செளந்திராந்திகர் புறப்பொருள்கள் வழியளவையானறியப்படுமென்பர்.  மேலும், சாதிபேதம், உயிர்கள், அடிசேர் முத்தி முதலியன இவர்களுக்கு உடம்பாடில்லை.  நம் செந்நாப் போதார்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்பதனாலும்,

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள.                    1101

என்பதனாலும் வாயிற் காட்சியையும்,

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.                                  1204

என்பதனால் மானதக் காட்சியையும்,

உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினுங் காமம் இனிது                        1201

என்பதனால் தன்வேதனைக் காட்சியையும் உடம்பட்டு இவ்வளவைகளினாலே புறப்பொருள்கள் காணப்படுகின்றனவென்றும்,

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.                          321

என்றும்,

உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.                             330

என்றுங் கூறுவதால் உயிருண்டென்றும்,

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                         134

என்று கூறுவதால் சாதி உண்டென்றும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.                                 10

எனக் கூறுவதால் அடிசேர் முத்தி யுண்டென்றுங் கொள்கின்றார்.  ஆகையால் செந்நாப்போதார் 'செளத்திராந்திகர்' அல்லர்.

(ஈ) 'வைபாடிகர்' அல்லர்

வைபாடிகர் மஞ்சளும் சுண்ணாம்புங் கூடினவிடத்து ஒரு சிவப்பு நிறந் தோன்றுமாப்போல, காணப்பட்ட பொருள்களும் பொறிகளின் புலன்களாகிய அறிவும் கூடினபோது உலகப் பொருள்கள் பொருந்தித் தோன்றுவது ஞானக் காட்சியென்றும், அதைத் தெளிந்தவர்க்குப் புத்தர் வீடு தருவரென்றுங் கூறுவர், திருவள்ளுவர்.

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து             24

என்றும்,

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.                             28

என்றும் கூறுவதால் ஐம்பொறிகளையடக்கிப் புறப்பொருள்களை யுணராதிருப்பது ஞான காரணமென்றும்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                             8

என்று கூறுவதால் இறைவனடி சேர்தலே முத்தியின்ப மென்றும் உடம்படுகின்றார்.

ஆகையால் திருவள்ளுவ தேவர் 'வைபாடிகர்' அல்லர்.

(3) 'ஆசீவகர்' அல்லர் (ஆசீவகம் - சமணம்)

    'ஆசீவகர்' நிலவணு நீரணு தீயணு வளியணு ஆகிய நான்கணுக்களின் கூட்டுறவால், சீவ அணு வினைக்கீடான உடலை யெடுக்குமென்றும் இவ்வணுக்களுக்கு வேறாய்க் கடவுள் இல்லையென்றுங் கூறுவர்.  நம் பெரு நாவலர் தமது 'உத்தர வேதத்'தில்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்று கூறுவதனால் உலகுக்குக் கருத்தாவாகிய ஆதிபகவனுண் டென்றும்,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.              377

என்று கூறுவதனால் கன்ம பலன்களைச் சீவர்களுக்குக் கடவுளே கொடுப்பனென்றும் உடம்படுகின்றார்.

    ஆகையால் நம் தேவர், 'ஆசீவகர்' அல்லர்.

(அ) 'நிகண்டவாதி' அல்லர்

    கண்டம் - உடை.  ந男கண்டம் - உடையின்மை.  நிகண்டவாதிகளுக்கு உடையில்லை.  இவர்கள் முக்குணங்கள் கெடுவதே முத்தியென்பர்.  நம் தேவர்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.                  788

என்ற திருக்குறளால் உடை உண்டென்றும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.                       10

என்ற திருக்குறளால் இறைவனடி சேரும் முத்தி யுண்டென்றுங் கூறுகின்றனர்.

ஆகையால் தேவர் 'நிகண்டவாதி' அல்லர்.

 

4) 'தார்க்கிகர்' அல்லர்

    'தார்க்கிகர்' நுண்ணணுக் (பரமாணு) காரண வாதங் கூறுவர், நாயனார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்ற திருக்குறளால் உலகுக்குப் பகவன் காரணம் என்று கூறுகின்றார்.

    ஆகையால் நாயனார், 'தார்க்கிகர்' அல்லர்.

(அ) 'வைசேடிகர்' அல்லர்

    வைசேடிகர் - திரவியம், குணம், தொழில், சாதி, விசேடம், சமவாயம், இன்மை எனும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொது வியல்பு வேற்றியல்புகளை யுணர்தலால், உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே உடம்பு முதலியவற்றை நானென்று எண்ணிய பொய்யுணர்வு கழியும்.  அது கழியவே முயற்சியின்மையின் நல்வினை தீவினைகளில்லையாய்ப் பிறவி ஒழியும்.  அங்ஙனம் ஒழியவே வரக் கடவனவாகிய துன்பங்களின்மையின் உடம்பு முகந்து கொண்ட வினைப்பயன், நுகர்ச்சியாற் ககிவுழி, இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற் கேதுவின்மையின் அறிவின்றிப் (பாடாணம்) கல்போற் கிடப்பதே முத்தியென்பர்.  நம் மாதானுபங்கியார் தமது பொதுமறையில்.

    தாம்வீழ்வார் மென்றோன் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு.                1103

என்ற திருக்குறளில் பதமுத்தியையும்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.                           3

என்ற திருக்குறளில் முடிந்த முத்தியையுங் கூறுவதால் மாதானு பங்கியார் 'வைசேடிகர்' அல்லர்.

 

(ஆ) 'நையாயிகர்' அல்லர்

    'நையாயிகர்' முத்தியில் ஆனந்த முண்டென்று கூறினாலும் இறைவனடி சேரும் முத்தியை உடம்படார்.  நாயனார்,

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேரா தார்.                        10

என்ற திருக்குறளால் அடிசேர் முத்தியை உடம்படுதலால் அவர் 'நையாயிகர்' அல்லர்.

(5) 'மீமாஞ்சகர்' அல்லர்

    மீமாஞ்சகர் வேதத்தின் ஞான காண்டத்தை யிகழ்ந்து கரும காண்டத்தையே கொள்வர்.  ஆன்மாக்கள் பலவாய், நிலையாய், பரவலாய் (வியாபகமாய்), தொன்மையே (அநாதியே) காமம் சினம் முதலிய (காமக்குரோதாதிகளாகிய) பாசத்தை யுடையவைகளாய், வினைக்கீடாகப் பிறந்திறந்து, வினைகளைச் செய்து வினைப் பயன்களை நுகர்ந்து வரும்.  இவ்வான்மாக்களுக்கு வேறாய்க் கடவுள் (பரமான்மா) ஒருவன் உண்டென்பதும், உலகம் தோன்றியழியு மென்பதும் பொய்; உலகம் என்றும் இவ்வாறே நிலைபெறும் என்பர்.  நம் நான்முகனார்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.           21

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.   24

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.                  25

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.              341

வேண்டினஉண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.                 342 

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு       343

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து        344

என்னுந் திருக்குறள்களில் ஞான காரணமாகிய துறவு, ஐம்பொறியடக்கல் முதலியவைகளைக் கூறுதலானும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.                350

என்னுந் திருக்குறளில் ஆன்மாக்களுக்கு வேறாய் முதல்வனுண்டென்றும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்னுந் திருக்குறளில் உலகுக்கு முதல்வராய் அதனை ஆக்கி நிறுத்தி அழித்து வருபவராய் ஒரு கடவுளுண்டென்றும் கூறுதலானும் திருவள்ளுவ நாயனார் 'மீமாஞ்சகர்' அல்லர்.

(அ) 'பட்டர்' அல்லர்

    பட்டர் கன்மமானது தானே பயன்கொடுக்குமென்று கூறுவர்.  தேவர்,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.             377

என்ற திருக்குறளில் கன்மபலனைக் கொடுப்பவன் கடவுளென்று கூறுவதால் அவர் 'பட்டர்' அல்லர்.

(ஆ) 'பிரபாகரர்' அல்லர்

    பிரபாகரர் கன்மநாசத்தில் 'அபூர்வம்' என ஒன்று தோன்றி நின்று பயன் கொடுக்குமென்றும், 'பாடாணம்' போற் கிடப்பதே முத்தியென்றுங் கூறுவர்.  நம் முதற் பாவலர்,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.             377

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.                           3

என்னுந் திருக்குறள்களில் கன்ம பலனைக் கொடுப்பவன் முதல்வனென்றும், முதல்வன் திருவடியைச் சார்ந்தின்புற்று எக்காலும் வாழ்வதே முத்தியென்றும் கூறுதலால், அவர் 'பிரபாகரர்' அல்லர்.

(6) 'ஏகான்மவாதி' அல்லர்

    ஏகான்மவாதியர் உண்மை அறிவின்ப வடிவமான கடவுள் (சச்சிதானந்த ரூபமான பரப்பிரமம்) ஒன்றே உள்ளது.  அதற்கு வேறான உயிர்கள், உலகம், உலகத்துப் பொருள்கள் எல்லாம் கானல்நீர் போற் காணப்படுவனவேயன்றி உண்மையில் இல்லையென்பர்; வேதத்தின் கருமகாண்டத்தை இவர்கள் இகழ்வர்.

    நாயனார் முதல் திருக்குறளில் உலகும், உலக முதற் பொருளும் உண்டெனக் கொள்வதனாலும்,

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.                22

என்ற திருக்குறளில் பல உயிர்கள் உண்டெனக் கொள்வதனாலும்,

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.                   259

என்ற திருக்குறளில் வேள்வி முதலிய (யாகாதி) கருமங்களுண்டெனக் கொள்வதனாலும் 'ஏகான்மவாதி' அல்லர்.

(அ) 'மாயாவாதி' அல்லர்

    மாயாவாதிகள் 'அத்தியாசவாதம்' கூறுவர்; கடவுளுக்கு வேறாக உயிர்கள் இல்லையென்பர்.  உலகம் உயிர் இறை ஆராய்ச்சியில் (ஜெகஜீவ பரத்துவ விசாரத்தில்) தோன்றும் வேதாந்த ஞானத்தால் கடவுளுருவம் (பிரமரூபம்) யானென அறிவதே முத்தியென்பர்.  நம் தேவர்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்பது முதலிய திருக்குறள்களால் உள்ளதே செயலாதல் (சற்காரிய வாதங்) கூறுகின்றார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை           322

என்பது முதலிய திருக்குறள்களால் கடவுளுக்கு (பரமான்மாவுக்கு) வேறாக உயிர்களே (சீவான்மாக்கள்) உண்டென்கின்றார்;

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.                        10

என்ற திருக்குறளால் இறைவனடி சேர்கின்ற முத்தியைக் கூறுகின்றார்.

ஆகையால் தேவர் 'மாயாவாதி' அல்லர்.

(அ) 'நிரீச்சுரசாங்கியர்' அல்லர்

    'நிரீச்சுரசாங்கியர்' முக்குணங்களும் அடங்குவதே முத்தியென்பர்.  செந்நாப்போதார்,

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                             8

என்பது முதலிய திருக்குறள்களால் இறைவனடியைச் சேர்வதே முத்தி யென்கின்றார்.

    ஆகையால் அவர் 'நிரீச்சுரசாங்கியர்' அல்லர்.

(ஆ) 'பாற்கரியவாதி' அல்லர்

    'பாற்கரியவாதிகள்' உண்மையறிவின்ப வடிவமான கடவுளே (சச்சிதானந்த ரூபமான பிரமமே).  அறியாமைப் பொருளும் (சடமும்), அறிவுப் பொருளுமாய் (சித்துமாகிய) உலகங்களாய்த் திரிந்தது (பரிணமித்தது), அங்ஙனம் திரிந்து வேறுபட்டு (பரிணமித்து விகாரப்பட்டு) அறியாமையினாற் கட்டப்பட்டது (பந்தமாயிற்று); அருளுருவத்தில் (பரமார்த்தத்தில்) ஒரு பொருளே உள்ளது.  வேதாந்த ஞானத்தால் கடவுள் (பரப்பிரமம்) விளங்கும்.  அதில் ஈடுபடும் இலயித்தலாகிய உயிர் கெடுகின்ற முத்தியே முத்தியென்பர்.  முதற் பாவலர்,

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.                          1062

என்ற திருக்குறளால் முதல்வன் தானே உலகாகாமல் உலகை இயற்றினானென்றும்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.                           3

என்ற திருக்குறளால் முதல்வனடியைச் சேர்ந்து நீடுவாழ்வதே 'முத்தி' என்றுங் கூறுகின்றார்.

    ஆகையால் நாயனார் 'பாற்கரியவாதி' அல்லர்.

(இ) 'கிரீடாப்பிரமவாதி' அல்லர்.

    கிரீடாப்பிரமவாதிகள், 'பிரமமே நான்' என்றும், நான் ஒருபடித்தன்றிப் பல்வேறு வகைப்பட்ட திரிபுப் (விகாரப்) பொருள்களோடு கூடிப் பலவாற்றான் விளையாடுகின்றேன் என்றும், அங்ஙனம் விளையாடுகின்றேன் என அறிவதே 'முத்தி' என்றுங் கூறுவர்.

    திருவள்ளுவ தேவர் கடவுளுக்கு வேறாய் உலகும், உயிர்களும் உண்டெனக் கூறுவதாலும், அடிசேர் முத்தியை உடம்படலானும், 'கிரீடாப் பிரமவாதி' அல்லர்.

(ஈ) 'சத்தப்பிரமவாதி' அல்லர்

    சத்தப் பிரமவாதிகள் காரணமாகிய கடவுள் (பரப்பிரமம்) இறுதிக் காலத்தில் ஒலி (சத்த) வடிவிற்றா யிருக்கும்; அஃது அறியாமையினால் (அவிச்சையினால்) 'சடமும்' 'சித்துமாய' உலகங்களாய் விரியும்; முடிவில் 'சத்தமாத்திரமே' உள்ளது; இவ்வாறு அறிவதே 'முத்தி' என்பர்.  தெய்வப்புலவர்,

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.                          1062

என்றும் "ஆதி பகவன் முதற்றே உலகு" என்றும் அருளியிருத்தலினாலே 'பிரமத்துக்கு வேறாய் உலகு' உண்டென்றும், அவ்வுலகத்துக்குக் கருத்தா 'ஆதி சத்தி' யோடு கூடிய எண்குணனாகிய 'பகவன்' என்றும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.                        10

என்றும் அருளியிருத்தலினாலே 'அடிசேர் முத்தியே முத்தி' என்றும் உடம்படுகின்றார்.  அன்றியும் தமது தமிழ் மறையில் ஓரிடத்திலாவது ஒலிவடிவக் கடவுளைப் (சத்த வடிவப் பிரமத்தைப்) பற்றிக் கூறவில்லை.  ஆகையால் தெய்வப் புலவர் 'சத்தப்பிரம வாதி' அல்லர்.

(7) 'சாங்கியர்' அல்லர்

    சாங்கிய மூலப்பகுதி 24ஆம் தத்துவம்; புருடன் 25 ஆம் தத்துவம்; மூலப் பகுதியின் திரிபு (பரிணாமம்) புத்தி; அதுவே மான் என்றும் அந்தக் கரணம் என்றும் பெயர் பெறும்; மூலப் பகுதியையும் புருடனையும் பகுத்துணர்வதால் 'அவிச்சை' நீங்குவதே முத்தியென்பர்.

    உத்தரவேதமுடையார் தமது தெய்வ நூலில் (மண் முதல் நாத மீறாகிய முப்பத்தாறு) தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவராகிய (அதீதராகிய) 'ஆதி பகவனை' வாழ்த்துதலினாலும்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது         7

என்றும்,

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                       8

என்றும் அருளுதலினால் சாங்கியர் கூறும் 'அவிச்சை' நீங்குவதே முத்தியென்பதை உடம்படாமையினாலும் 'சாங்கியர்' அல்லர்.

(8) 'யோகமதத்தர்' அல்லர்

    யோகமதத்தர், நிலம் முதல் ஆன்மா (புருடன்) ஈறான இருபத்தைந்து தத்துவங்களுக்கு மேல் இருபத்தாறாம் தத்துவம் இறைவன்; அவனே சாத்திரங்களை அருளிப் 'புருட' ருக்கு ஞானத்தை அறிவுறுப்பன் என்பர்.

    நம் தமிழ்மறையுடையார், தமது வாயுறைவாழ்த்தில், (நாதாதீத பரசிவனாராகும்) ஆதி பகவனைக்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.               9

என்பது முதலிய திருக்குறள்களால் வலியுறுத்தி வாழ்த்தியிருத்தலால் அவர் 'யோகமதத்தர்' அல்லர்.

(9) 'பாஞ்சராத்திரி' அல்லர்

    பாஞ்சராத்திரிகள், 24 ஆம் தத்துவம் குணதத்துவம், 25 ஆம் தத்துவம் 'வாசுதேவ' னாகிய கடவுள் (பரம்பொருள்); அவனிடத்தில் தோன்றிய (கண்ணன், அநிருத்தன், மகரத்துவசன், இரெளகிணேயன் எனும்) நான்கு அணிகளால் (வியூகர்களால்) 'சடமுஞ் சித்துமாகிய' எல்லா உலகங்களும் படைக்கப்பட்டன; ஆகலான் எல்லாம் 'வாசுதேவன்' 'பரிணாமமே' யென்றறிந்து, 'பாஞ்சராத்திர' முறையே தீக்கை பெற்று, 'வாசுதேவனை' வழிபட்டு 'வாசுதேவன்' உருவில் அடங்கி விடுதலே (இலயமாதலே) முத்தியென்பர்.

    திருவள்ளுவர் நாயனார், உலக காரணன் தத்துவாதீதனாகிய 'ஆதி பகவன்' என்றும், (அவன் வாசுதேவனிடமில்லாத சிவகுணங்களாகிய தன்வயமாதி 'எண்குணம்' உடையவனென்றும்) அவனடியிற் சார்ந்து இன்புற்று நிற்பதே முத்தியென்றும் அருள்கின்றமையினாலே அவர் 'பாஞ்சராத்திரி' அல்லர்.

(10) 'பாசுபதர்' அல்லர்

    பாசுபதர், ஆன்மாக்கள் பல; ஆணவமல மென்பதொன்றில்லை; மாயை கன்மங்களே உண்டு; இவற்றின் உவர்ப்பால் தீக்கை யுற்றவனை ஈசன் ஞானம் பற்றும்; அப்போது ஈசன் தன் குணங்களை அவன்பாற் பற்றுவித்துத் தான் 'அதிகாரத்தின் ஒழிவு' பெற்றிருப்பன் என்பர்.  நாயனார்,

*இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.        5

[ * ஏக னநேக ரிருள்கரும மாயையிரண்
  டாகவிவை யாறாதி யில்.

  என்ற திருவருட்பயன் திருக்குறள், இருள் என்றது ஆணவமலமென உணர்ந்து தலைக் காண்க.]

என்ற திருக்குறளால் இருளெனப் பெரிய ஆணவமலம் உண்டென்றும்,

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.                4

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.           7

எனும் திருக்குறள்களால் (ஈசனுடைய அதிகாரத்தைப் பெறாது) அவனடியிற் சார்ந்தின்புற் றிருப்பதே முத்தியென்றுங் கூறுகின்றார்.  ஆகையால் நாயனார் 'பாசுபதர்' அல்லர்.

(11) 'மாவிரதர்' அல்லர்

    மாவிரதர் பாசுபதர் கூறிய முறையே ஆன்மாக்களின் இயல்பைக் கூறி, தங்கள் சாத்திர முறையே தீக்கை பெற்று எலும்பு மாலை யணிதல் முதலிய சரியைகளின் வழுவா தொழுகின் முத்தி உண்டென்றும், முத்தருக்குச் சிவனோடு சமமான எல்லாக் குணங்களும் தோன்றும் (உற்பத்தியாம்) என்றுங் கூறுவர்.  தெய்வப்புலவர்,

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.               9

என்பது முதலிய திருக்குறள்களால் சிவாகம நெறியே மூர்த்தி வழிபாடும்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.           7

என்பது முதலிய திருக்குறள்களால் அடிசேர் முத்தியும் கூறுகின்றதனால் 'மாவிரதர்' அல்லர்.

(12) 'காபாலி' அல்லர்

    காபாலிகள் ஆன்மாக்கள் இயல்பும் பந்த இயல்பும் மாவிரதரை ஒப்புக்கொண்டு, தங்கள் சாத்திர முறையே தீக்கை பெற்றுப் பச்சைக்கொடி ஒன்றைக் கைக்கொண்டு நாடோறும் மனிதர் தலையோட்டில் ஐயமேற்றுண்டு செயலற்று மோனியராய்(உன்மத்தராய்) நிற்பவரிடத்தே சிவன் புகுந்தியக்குதலால் (சிவனாவேசித்தலால்) எல்லாக் குணங்களும் பெற்றுச் சிவசமமாதல் முத்தியென்பர்.

    நாயனார் 'காபாலிகள்' கூறுகின்ற சரியை நெறியை உடம்படாமையானும், அடிசேர் முத்தியையே சிறப்பாகக் கொண்டிருத்தலானும் அவர் 'காபாலி' அல்லர்.

(13) 'வாமி' அல்லர்

    வாமிகள், 'சடமுஞ் சித்து' மாகிய அனைத்துலகும் அம்மையின் திரிபே (சத்தியின் பரிணாமமே) என்றும், வாம நூலில் விதித்த முறையே ஒழுகி அருள் அம்மையின் அடங்குதலே (சத்தியில் இலயித்தலே) முத்தியென்றுங் கூறுவர்.  நான்முகனார்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.                           3

என்றும்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.           7

என்றும், தமது முப்பானூலில் முதல்வனை வாழ்த்தியதனானும்,

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.              1062

என்றும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்றும் கூறியதனால் 'சத்தியின் பரிணாமம்' உலகென்பதனை உடம்படாமையானும், அடிசேர் முத்தி கூறுதலானும்,

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றுங்
கட்காதல் கொண்டொழுகு வார்.             921

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.                 922

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.                926

என்பன வாகிய திருக்குறள்களால் வாமிகளுக்குடம்பாடான கள்ளுண்ணலையும்,

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.                321                

என்பது முதலிய திருக்குறள்களால் கொலையையும்,

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்                 251

என்பது முதலிய திருக்குறள்களால் புலாலுண்ணலையும்,

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.              281

என்பது முதலிய திருக்குறள்களால் களவாடலையும் மறுக்கின்றதனானும் நாயனார் 'வாமி' அல்லர்.

    வாமிகளுக்குக் கொலை, களவு முதலியவை உடம்படாடென்பதற்குப் பிரமாணம்,

    வாழவே வல்லை வாமி வலக்கைதா என்னு யிர்க்குத்
    தோழனீ யுன்னை யொப்பார் சொல்லிடி னில்லை கண்டாய்;
    கோழைமா னுடர்தீ தென்னுங் கொலைகள வாதி கொண்டே
    சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றி னாயே.

                                                 -சித்த畽யார் பரபக்கம் - 26.

(14) 'வைரவர்' அல்லர்

    வைரவர் பெரும்பாலும் வாம மதத்தோடொத்துச் சிறுபான்மை சீலங்களால் (ஆசாரங்களால்) வேறுபட்டு வயிரவனே பரம்பொருள் எனக் கொண்டு வைரவ பதத்திற் சேர்வதே முத்தியென்பர்.

    பெருநாவலர், வைரவர் கூறுகின்ற 'ஆசாரங்களை' மறுக்கின்றமையானும், வைரவர்கு வேறாகிய 'ஆதி பகவனை' வாழ்த்துகின்றதனானும் அவர் 'வைரவர்' அல்லர்.

(15) 'ஐக்கவாதசைவர்' அல்லர்

    அயிக்கவாத சைவர் ஆணவமலமென்ப தொன்றில்லை; மாயா கன்ம மலங்களே உள்ளன; ஆன்மாக்களின் இருவினைகளுக் கீடான உடல் முதலியவைகளை (சரீராதிகளை) யடைந்து வினைகளை விரும்பி (ஆர்ச்சித்து) வினைப் பயன்களை அருந்தி வருகின்ற காலத்திலே இருவினையொப்பு வந்த ஆன்மா கடவுளருளாலே பந்தமெலாங் கழிந்து தனக்கு முன்புள்ள மாசற்ற நிலையை அடையும் என்பர்.

    நாயனார் இருண்மலமாகிய ஆணவ மலத்தை உடம்படலானும், இறைவனடி சேர்ந்தின்புறு முத்தியை உடம்படலானும் 'அயிக்கவாத சைவர்' அல்லர்.

(16) 'பாடாணவாத சைவர்' அல்லர்

    பாடாணவாத சைவர் ஆணவமலம் ஆன்மாவுக்குக் குணம் போல இயல்பாய்த் தொன்மையே (சகசமாயநாதியே) உள்ளது.  அதனால் மாயை கன்மங்கள் ஆன்மாவைத் தலைக்கூடும்; பாசஞான மெல்லாந் தன்கீழ் விரவல் என்று (வியாப்பியமென்று) அறிந்து நீங்குதன் மாத்திரையே முத்தி; முத்தி பெற்ற வழியும் 'சகசமலமாகிய' ஆணவமலம் நீங்குதலின்றிச் சுட்டறிவும், இன்ப துன்ப நுகர்வுமற்று (சுகதுக்காநுபவங்களுமற்று).  ஆன்மா கல்லைப் (பாடாணம்) போற் கிடக்கும் என்பர்.  பெருநாவலர்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.        5

என்ற திருக்குறளில் இறைவன் புகழை விரும்பினாரிடத்தே ஆணவமலத்தின் காரணமாகப் பொருந்துகின்ற இருவினைகளும் நீங்குமென்றதனால், காரணம் நீங்காதபோது அதனால் வருகின்ற வேதனைகள் (உபாதிகள்) முற்றிலும் பின் தோன்றுதலின்றி (செனிப்பின்றி) நீங்காவகையாலும், காரணமாகிய ஆணவமல ஆற்றல் (சத்தி) கெட்டாலன்றி அதனாற் சார்ந்து வருகின்ற வினைகள் கெடா வகையாலும், வினைகள் நீங்குமென்றதனானே வினைகளுக்குக் காரணமாயுள்ள ஆணவமல 'சத்தி' நீக்கமும் நாவலருக்கு உடம்பாடென்றும்,

என்ற திருக்குறளால் இறைவனடி சேர்ந்தின்புற்று வாழ்தலாகிய முத்தியே உடம்பாடென்றும் பெறப்படுவதால், நாயனார் 'பாடாணவாத சைவர்' அல்லர்.

(17) 'பேதவாத சைவர்' அல்லர்

பேதவாத சைவர் மும்மலங்களும் அநாதி; கரணங்களிற் சென்ற தன்னறிவு பக்குவத்தில் தன் மாட்டொன்றி, ஆதரவின்றி (நிராதாரமாய்) நிற்கும்; இறைவனருளால் மும்மலங்களும் நீங்கிய ஆன்மா பெறுவானும் பேறுமாயிருக்கும்; அதன் மேலும் அடிமையாதலில்லையென்பர்.

முதற்பாவலர்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.        5

என்ற திருக்குறளால் மாயா கன்ம மலங்கள் ஆகந்துகம் என்றும்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.                           3

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.                        10

என்ற திருக்குறள்களால் இறைவனடியிற் கலந்து அவனருளிய ஆனந்தத்தையுண்டு வாழ்தலே முத்தியென்றுங் கூறுதலால், நாயனார் 'பேதவாத சைவர்' அல்லர்.

(18) 'சிவசமவாதசைவர்' அல்லர்

    சிவ சமவாத சைவர், பதி ஞான, பசு ஞான, பாச ஞானங்கள் அநாதியே உள்ளன; புழு வேட்டுவனை நினைந்து வேட்டுவனாகி அதன் தொழிலையும் இயற்றி நிற்றல்போல, ஆன்மா பதியை நினைந்து அதன் வடிவுற்று அதன் தொழிலை இயற்றி நிற்பதே முத்தியெனக் கூறுவர்.

தேவர் இறைவனடி சார்ந்தின்புற்று வாழ்தலே முத்தியென,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.                           3

என்ற திருக்குறளால் வலியுறுத்திக் கூறுவதால், அவர் 'சிவசமவாதசைவர்' அல்லர்.

(19) 'சிவசங்கிராந்தவாதசைவர்' அல்லர்

    சிவசங்கிராந்தவாத சைவர் ஆன்மாவின் சந்நிதியிற் காந்தபசாசம் போல உடல் இயங்குழி அதன்கணின்று கருவிகளே விடயங்களை அனுபவிக்கும், மலம் நீங்கும் வழி, கண்ணாடியின் முகவொளி தோற்று மாறு போல முதல்வன் திருவருள் ஆன்மாவின் மாட்டுச் சங்கிரமித்துத் தோன்றும், அவ்வழி உப்பளத்தில் இட்டவையெல்லாம் உப்பாமாறு போல ஆன்மா சிவமேயாய் அவ்வான்மாவின் சந்நிதியில் அறிவனவாகிய பசு கரணங்களுஞ் சிவகரணங்களாய் மாறுஞ் சித்தியுற்றுச் சிவத்தை அறியுமென்பர்.  இவர் கூறும் முத்தி சித்தி முத்தியாகும்.  திருவள்ளுவ நாயனார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.                    25

என்றும்,

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.            27

என்றுங் கூறுமாற்றால் சடவத்துக்களாகிய இந்திரியங்களுக்கு வேறாய ஆன்மாவே அறியுமென்றும்,

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.                   259

என்று கூறுமாற்றால் உயிர்களுக்கு முதல்வன் சார்பில் வழி அறிவு விளங்கப் பெறுவதில்லை என்றும் சிவசங்கிராந்தவாத சைவர் கூறும் சித்தி முத்தியை உடம்படாது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.                        10

என்று கூறுமாற்றால் அடிசேர் முத்தியே முத்தி என்றும் கூறுவதால் திருவள்ளுவ நாயனார் 'சிவசங்கிராந்தவாத சைவர்' அல்லர்.

(20) 'ஈசுரவ விகாரவாத சைவர்' அல்லர்

    ஈசுரவ விகாரவாத சைவர், பல துளைக்குடத்துத் தீபம் போல நவத்துவார சரீரத்தில் அறிவாய் நிற்கின்ற ஆன்மா, மலபரிபாகஞ் சத்தினிபாதமுற்ற அளவில் முதல்வன் திருவருளால் ஞானத்தைப் பெற்று, வெயிலில் துன்புற்ற ஒருவன் மர நிழலடைந்து ஆறுவது போல அம்முதல்வன் திருவடி நிழலைத் தலைக்கூடிப் பின் முதல்வனது உதவியை (உபகாரத்தை) அவாவாது என்பர்.  நாயனார்,

* விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
  முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.                                       1186

[*விளக்கு - சிவஞா璽ம், இருள்-ஆணவம்]

என்ற திருக்குறளால் என்றும் இறைவன் 'உபகார மவசியம்' என உய்த்துணரக் கூறியிருத்தலால், நாயனார் 'ஈசுரவவிகாரவாத சைவர்' அல்லர்.

(21) 'சிவாத்துவித சைவர்' அல்லர்

    சிவாத்துவித சைவர், மரத்தில் விரவிய (வியாப்பியமான) கவடு கோடு முதலியன வெல்லாம் மரமே யாமாறு போலச், 'சத சத்துக்கள்' ஆகிய உயிர்களும் 'அசத்துக்கள்' ஆகிய பாசக் கூட்டங்களும் குண குணிகட்குத் தம்முள் உளதாகிய வேற்றுமையைப் போலச் 'சத்துக்கு' உட்பேதமே யன்றிப், புறப்பேத மின்மையான் அவையனைத்தும் 'சத்து' எனவே படும்.  படவே, பதித் தன்மையின்வேறாய் உயிருக்கு அறியுந் தன்மை உண்டென்னில் தனித்த முதலெனப்பட்டு வழுவாமாகலின் 'சத்து' ஆகிய பதிப்பொருளே உயிர்களினிடமாக நின்றறியும் என்பர்.  ஆகவே இவர் கூறுவது 'நிமித்த காரணம்'.  நாயனார்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.                           3

என்பது முதலிய திருக்குறள்களால் 'கடவுள் வாழ்த்து' என்னும் அதிகாரத்தில், முதல்வனின் வேறாக உயிர்கள் உண்டென்றும்,

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.              1110

என்று கூறுமாற்றால் உயிர்களுக்கு முறை முறையாக விளங்கப் பெறும் அறியுந் தன்மை உண்டென்றும் கூறுவதனாலும், சிவாத்துவித சைவர் கூறும் 'நிமித்தகாரண பரிணாம வாதம்' யாண்டுங் கூறாமையானும் நாயனார் 'சிவாத்துவித சைவர்' அல்லர்.

(அ) 'சுத்தசைவர்' அல்லர்

    சுத்தசைவர் சித்தாந்த சைவரொப்பப்பதி, பசு, பாச இயல்புகளைக் கொண்டாலும் முத்தியில் உயிரானது சிவத்தில் அடங்கி (பரம்பொருளிடத்து அயிக்கமுற்று) ஒரு பயனும் ஓரின்பமும் (ஓரானந்தமும்) இன்றி நிற்குமென்பர்.  செந்நாப்போதார்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.     361

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.  362

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.    369

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.         370

என்றும்

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.        352

என்றுங் கூறுமுகத்தால் பெத்த நீக்கமும் முத்திப் பேறாகிய இறையின்பப் பேறும் (சிவானந்தப் பிராப்தியும்) உடம்படலால் தெய்வப் புலவர் 'சுத்த சைவர்' அல்லர்.

திருவள்ளுவ நாயனார் சித்தாந்த சைவரே

    சித்தாந்த சைவர், உள்ளது செயலுறுதலாகிய (சற்காரிய) வாதங் கொண்டு, காட்சி, கருதல் (அனுமானம்), உரை (ஆகமம்) எனும் மூவகை அளவைகளால் (மூவித பிரமாணங்களால்) கடவுளொருவருண்டென்றும், அவர் சித்தாந்தத் தெய்வமாகிய சிவமே (சிவபரம்பொருளே) என்றும், அக்கடவுளுக்கு வேறாய் எண்ணில்லாத உயிர்கள் உண்டென்றும், அவைகளைப் பந்தித்த ஆணவமல மொன்றுண்டென்றும், அம்மலத்தின் காரணமாக உயிர்களுக்குக் கன்மமலம் தொன்மையே (அநாதியே) உண்டென்றும், மலக் கட்டுடையவர்களான (சம்பந்திகளான) உயிர்களுக்கு உறைவிடமாக மாயை மலமொன்று உண்டென்றும், மலத்தைச் செலுத்துகின்ற 'ஆதிசத்தி' யாகிய 'திரோதான' மலமும், அதனாலான மாயைக் காரியங்களாகிய 'மாயேய மலமும்' உண்டென்றும், கன்ம மலமானது ஏறுவினை (ஆகாமியம்), இருப்பு வினை (சஞ்சிதம்),  ஏன்ற வினை (பிரார்த்தம்) என முத்திறப்படும் என்றும், கன்ம பல போகங்களை நுகர் (அனுப) விக்கும் இடங் (தானங்க) ளாகிய துறக்க (சுவர்க்க), இருளுலகங்கள் ( நரக லோகங்கள்) உண்டென்றும், அங்ஙனம் நுகருங் (அனுபவிக்குங்) கால் அடையத்தக்க தேவர், அலகை முதலிய பிறவி (யோனி) பேதங்கள் உண்டென்றும், இங்ஙனம் இறந்து பிறந்து வருவதால் மறுபிறப்புக்கள் உண்டென்றும், அழிப்பு (சங்காரம்) இளைப்பொழித்தலாகும் என்றும், பிறவிப் பெருங்கடலைக் கடக்கத்தக்க வாயில்களை (உபாயங்களை) அறிவிக்கும் விதி நூல்களாகிய வேத சிவாகமங்கள் உண்டென்றும், அவற்றிற் கீடாக ஒழுகுங்கால் செய்யப்படுங் கன்மங்கள் நல்வினை தீவினைகளென இருதிறப்படூஉ மென்றும், இவைகளும் 'திருஷ்ட சன்ம போக்கியம்', 'அதிருஷ்ட சன்ம போக்கியம்', 'திருஷ்டாதிருஷ்ட சன்ம போக்கிய்' மென மூவகைப்படும் என்றும், அக் கன்ம பேதங்களால் போக பேதங்கள் உண்டென்றும், கன்ம பயன்கள் நுகர்ச்சியாவது உறுதி (அனுபவமாவது நிச்சயம்) என்றும், அப் பயன்களையும் இறைவனே உயிர்களுக்குக் கொடுப்பன் என்றும், அங்ஙனமாயினும் சிவாகமங்களின் வழி ஒரு வினைக்கு மற்றோர் வினையால் அழிவுண்டென்றும், கடமை (தருமங்) களைச் செய்யவேண்டுமென்றும், அவற்றைத் தக்கவர் தகாதவர் (பாத்திரா பாத்திரம்) அறிந்து செய்யவேண்டுமென்றும், கடமை (தருமங்) குள்ளே வேள்வி சிறந்ததென்றும், அதனினும் உயிரிரக்கம் (சீவகாருணியம்) மிகச் சிறந்ததென்றும், அதுவும் அருளில்லாதவழி கூடாதாகையால் உயிர்கள் மாட்டு அருள் வேண்டுமென்றும், அவ்வருள் இல்லாதவர் எத்தகையரானாலும், அவர்கள் வீடுபேற்றுத் திளைப்பு (மோட்சலோகாநுபவம்) இல்லையென்றும், அங்ஙனஞ் செய்கின்ற வினைகளும் ஒருவன் செய்தது அவனைச் சார்ந்தார்க்கும் ஆகுமென்றும், முத்தியுலகமானது தேவலோகத்துக்கு மேலுள்ள தென்றும், அதனை அடைவதற்கு நிலையும் நிலையாமையும் அறியும் ஞானம் (நித்தியா நித்திய வஸ்து விவேகம்) முதலாவதான காரண (சாதன) மென்றும், வேறு சிறந்த சாதனங்களும் உண்டென்றும், அவைகளைக் கடைப்பிடித்து மனம் வாக்குக் காயங்களால் முதல்வனை வழிபட வேண்டும் என்றும், அங்ஙனம் வழிபட்டார்க்குப் பிறவி (பெத்த) நீக்கமும் வீடு (முத்தி) பேறும் உண்டென்றும், முத்தியிலும் முப்பொருள்களும் முதல்வன் உதவியும் (உபகாரமும்) உண்டென்றும், முதல்வனின் அடிசேர் முத்தியே சித்தாந்த முத்தி என்றுங் கூறுவர்.  நாயனார்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்ற திருக்குறளால் 'சற்காரியவாதம்' கூறுகின்றதனானும், மேற்படி குறளில் உலகு என்றதனால் காட்சியளவையும் (காட்சிப் பிரமாணத்தையும்,) 'ஆதிபகவன் முதற்றேயுலகு' என்றதனால் கருதலளவையும் (அனுமானப் பிரமாணத்தையும்).

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                     543

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.                        290

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.                    610

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.             322

என்ற திருக்குறள்களால் உரையளவையும் (ஆகமப் பிரமாணத்தையும்) உடம்படுதலானும், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரம் கூறியதனாலும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.         10

என்பது முதலிய திருக்குறள்களானும் கடவுள் ஒருவரே உண்டென்றும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்ற திருக்குறளால் அக்கடவுள் சித்தாந்தத் தெய்வமாகிய ஆதிசத்தியாரோடு கூடிய சிவமே (சிவபரம்பொருளே) என்றும் கூறுதலானும்,

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.                     327

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.                      1013

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.             322

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.            22

என்ற திருக்குறளால் எண்ணில்லாத உயிர்கள் உண்டென்று கூறுதலானும்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.           5

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.                    352

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.                    359

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.               360

என்ற திருக்குறள்களால் ஆணவமலம் ஒன்றுண்டென்று கூறுதலானும்,

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.                 505

என்ற திருக்குறளால் கரும மலத்தை உடம்படுதலானும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                        1

என்ற திருக்குறளால் உலகுக்கு முதற்காரணமாகிய மாயா மலத்தையும், "ஆதி பகவன்" என்றதனால் "ஆதி சத்தியாகிய திரோதான மலத்தையும்', "உலகு" என்றதனால் மாயைக் காரியமாகிய 'மாயேய' மலத்தையும் உடம்படுதலானும்,

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.             361

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.            368

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.            369

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.                  370

என்ற திருக்குறள்களால் 'ஆகாமிய' கன்மத்தையும்,

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.    36

என்ற திருக்குறள்களால் 'சஞ்சித' கன்மத்தையும்,

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.            371

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.                378

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.             380

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.           619

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.                620

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.           1141

என்ற திருக்குறள்களால் 'பிராரத்த' கன்மத்தையுங் கூறதலானும்,

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.             58

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.          101

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.                213

நல்லாறு எனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.        222

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.           234

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.            290

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.         1103

புலத்தலின் புத்தேள்நா டுண்டோ நிலத்தோடு
நீரியைந் தன்னார் அகத்து.           1323

என்ற திருக்குறள்களால் 'துறக்கம்' உண்டென்று கூறதலானும்,

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.            121

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.               168

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.              243

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.   255

என்ற திருக்குறள்களால் நிரயத்தைக் கூறதலானும்,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.       50

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.           58

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.       84

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.       86

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.            121

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.        167

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.         234

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.    269

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.       610

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.  1081

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.   1083

என்ற திருக்குறள்களால் தேவர்கள் உண்டெனக் கூறுதலானும்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.         850

என்ற திருக்குறள்களால் அலகை உண்டெனக் கூறுதலானும்.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.       107

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.         339

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.       361

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.    362

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.     398

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.       1042

இம்மைப் பிறப்பின் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.     1315

என்ற திருக்குறள்களால் மறுபிறப்புக்கள் உண்டெனக் கூறுதலானும்.

மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.     1168

என்ற திருக்குறளால் அழிப்பும் அருளலின் (சங்கராமும்) அநுக்கிரகத்தின் பொருட்டே எனக் கூறுதலானும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.   134

என்ற திருக்குறளால் நான்மறையை உடம்படலானும்,

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.        6

என்ற திருக்குறளால் சிவாகமத்தை உடம்படலானும்,

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.        543

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.    549

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.         550

என்ற திருக்குறள்களால் சாதி (வருண) பேதங்களைக் கூறுதலானும்,

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.       41

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிற் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்        46

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.   50

வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.            342

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.    348

என்ற திருக்குறள்களால் நிலைகள் 'ஆச்சிரம' பேதங்களை உடம்படலானும்,

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்     96

என்ற திருக்குறளால் கன்ம பேதங்களாகிய நல்வினை தீவினைகளைக் கூறுதலானும்,

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.    264

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.          265

என்ற திருக்குறளால் எடுத்த பிறப்பின் (திருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும்,

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.      98

என்ற திருக்குறளால் இம்மை மறுமைப் பிறப்புக்களின் (திருஷ்டாதி திருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும்,

தவமுந் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.    262

என்ற திருக்குறளால் தவப் பிறப்பின் (அதிருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும் உண்டெனக் கூறதலானும்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.    37

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.               270

என்ற திருக்குறள்களால் கன்ம பேதத்தால் போக பேதங் கூறுதலானும்,

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.            207

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.                319

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.                378

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.               514

என்ற திருக்குறள்களால் கன்ம பலன்கள் அனுபவமானது நிச்சயமென்று கூறுதலானும்,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.     377

என்ற திருக்குறளால் இறைவனே கன்ம பலனைக் கொடுப்பனெனக் கூறுதலானும்,

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்               96

என்ற திருக்குறளால் ஒரு வினைக்கு மற்றொரு வினையால் கூறுதலானும்,

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.  36

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.        38

என்பது முதலிய திருக்குறள்களால் கடமைகளைச் (தருமத்தைச்) செய்ய வலியுறுத்தலானும்,

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.     87

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.    105

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.            104

என்ற திருக்குறள்களால் அறத்துக்குத் தக்கார் தகாதாரை (தருமத்துக்குப் பாத்திரா பாத்திரத்தை ) உடம்படலானும்,

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.     87

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.     259

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.         413

என்ற திருக்குறள்களால் வேள்வியை உடம்படலானும்,

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.         204

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.     255

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.    259

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.     252

என்ற திருக்குறள்களால் உயிரிரக்கம் கட்டாயமானது ( சீவகாருணியம் அவசியம்) என்றும், வேள்வியினும் சிறந்த தென்றுங் கூறுதலானும்,

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.              243

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.     247

என்ற திருக்குறள்களால் வீட்டுலகத்தை (மோட்ச லோகத்தை) அடைய உயிர்களிடத்து அருள் பாலித்தல் கட்டாயம் (அவசியம்) எனக் கூறுதலானும்,

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.      62

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.    63

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.  502

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.             508

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.    166

என்ற திருக்குறள்களால் ஒருவன் செய்த வினை அவனைச் சார்ந்தார்க்கும் ஆகும் எனக் கூறுதலானும்,

யான்எனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.           346

என்ற திருக்குறளால் தேவலோகங்களுக்கு அப்பாற்பட்டு மேலுள்ளது முத்தியுலகம் எனக் கூறுதலானும்,

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.    351

என்ற திருக்குறளால் 'நித்தியா நித்திய வஸ்து விவேகம்' கூறுதலானும்,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.       341

யான்எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.          346

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.          350

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.        352

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.        356

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். 362

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.   369

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.      370

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.    24

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.          27

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.             126

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.          513

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.              267

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.           268

என்ற திருக்குறள்களால் முத்தியடைதற்குரிய சிறந்த காரணங்களை (சாதனங்களை)க் கூறுதலானும்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.            3

என்பது முதலிய திருக்குறள்களால் மனத்தாற் செய்யப்படும் வழிபாட்டையும்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.    5

என்ற திருக்குறளால் வாக்காற் செய்யப்படும் வழிபட்டையும்,

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.           2

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.           9

என்ற திருக்குறள்களாற் காயத்தாற் செய்யப்படும் வழிபாட்டையும் கூறுதலானும்,

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.           359

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.       360

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.            352

என்ற திருக்குறள்களால் பிறவி(பெத்த) நீக்கமும் முத்திப் பயனுங் கூறுதலானும்,

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.     1186

என்ற திருக்குறளால் முத்தியிலும் முப்பொருளும் முதல்வன் உபகாரமும் உண்டென்று கூறுதலானும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.         10

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.           3

என்ற திருக்குறள்களால் அடிசேர் முத்தியாகிய சித்தாந்த முத்தியைக் கூறுதலானும், 'திருவள்ளுவ நாயனார் சித்தாந்த சைவர்' என்பது தேற்றம்.

முற்றும்

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1