
விளையாட்டுத் துறையில் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் அரசியலை அம்பலப்படுத்தும் கதை. அதை சொன்னவிதத்தில்தான் விளையாட்டுத்தனம் எட்டிப்பார்க்கிறது. 
பல்கழைக்கழகங்கள் அளவிலான கால்பந்து போட்டியில் தங்கள் கைவரிசையை ஸாரி 'கால்' வரிசையை காட்டி சாம்பியனாகிறது சிபி தலைமையிலான அணி. இந்த அணியின் பயிற்சியாளர் பிரகாஷ்ராஜுக்கும் கல்லூரி தலைவரான வில்லன் ஜாகிருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்படுகிறது.
இதனால் அணியின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடுகிறார் வில்லன். தேசிய அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த நினைக்கும் பிரகாஷ்ராஜ் அணிக்கு தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தொந்தரவு தரும் ஜாகிரின் செயல்பாட்டால் பயிற்சியாளர் பிரகாஷ்ராஜையும், ப்ளேயர் ஒருவரையும் இழந்து சிதைந்துபோகிறது சிபியின் அணி.
தங்களின் கால்பந்தாட்ட தவத்தில் கரடியாக புகுந்த ஜாகிரின் கொக்கரிப்புக்கும் கொடுமைக்கும் முடிவு கட்ட களமிறக்கும் சிபியும் அவரது நண்பர்களும் நினைத்தை சாதித்தார்களா இல்லையா என்பதே கதை.
சொல்லப்பட வேண்டிய கதை. விளையாட்டில் அரசியல் எந்தளவிற்கு தலைதூக்கியுள்ளது என்பதை அக்குவேறு ஆணிவேறாக பிரித்துக்காட்டிருக்கும் இயக்குனரின் துணிச்சலை உச்சிமுகர்ந்து பாராட்டதோன்றுகிறது. அதே சமயம் சொல்ல வந்த விஷயத்தில் உணர்ச்சி மிகுந்த இடங்கள் கோமா நிலைக்கு ஆட்படுவதால் ஆழப்பதிய வேண்டிய விஷயங்கள் அந்தரத்தில் ஊசலாடுகிறது.
வில்லனை சுட துப்பாக்கி வாங்க பணம் சேர்க்க போராடுவதற்குள் பாதிபடம் முடிந்துவிடுவது திரைக்கதையை நீர்த்துப்போக செய்கிறது.
எப்போதாவது பேசும் சிபியின் நடிப்பில் தேர்ச்சி தெரிந்தாலும் இன்னும் முதிர்ச்சி பெற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிலாவின் கதாபாத்திரம் அமாவாசையாவது ஏனோ? இந்த கதைக்கு நிலா அவசியமா என்ற கேள்வி படம் பார்க்கும் பச்சைக்குழந்தைக்கும் எழும்.
கால்பந்துதான் தியானம் என்று சொல்லும் பிரகாஷ்ராஜ், தனது அணி வீரர் ஒருவரை தற்கொலைக்கு தூண்டும் வில்லனை கண்டுகொள்ளாமல் விடும்போதுதான் தியானத்தின் 'வலிமை' புரிகிறது. அட ராமா, ராமா. இயக்குனர் மீதுதான் கோபம் வருகிறது.
கால்பந்துபோட்டி நடக்கும் காட்சியில், வில்லனின் ஆட்கள் சிபி அணியை கத்தி, பிளேடுகளால் காயப்படுத்தியும் நடுவர் உட்பட ஒருவருக்கும் இது தெரியாமல் போகும் இடத்தில் இயக்குனரின் அஜாக்கிரதை கைகொட்டி சிரிக்க வைக்கிறது.
ராஜேஸ்யாதவின் திறமையான ஒளிப்பதிவு, D. இமானின் நேர்த்தியான பின்னணி இசை இரண்டும் கதைக்கு கை கொடுத்தும் திரைக்கதை, இயக்கத்தில் காட்டாத அக்கறை 'லீ' யை சுண்டெலியாக்கிவிட்டது.
மொத்தத்தில் பிரபுசாலமனின் இயக்கம் மனசில் 'கொக்கி' போடவில்லை.
| +++++பிளஸ்++++++++ |
கதை
சிபியின் நடிப்பில் இருக்கும் தேர்ச்சி
ஒளிப்பதிவு
இசை |
| -----மைனஸ்-------- |
| திரைக்கதை - இயக்கம் |
|