
தனது குடும்பத்தை அழித்தவர்களை நாயகன் பழிவாங்கும் கதை. இயக்குனர் S.ஷெல்லா இதில் ஆன்மிகம், அவதாரம் என சில பூச்சுற்றல்களையும் சேர்த்திருக்கிறார்.
அரசு பொது மருத்துவமனை வார்ட் பாயான அஜித், அவ்வப்போது ராமர், கிருஷ்ணர் என கடவுள்களின் வேடமணிந்து ரவுடிகளை கொலை செய்கிறார். ஏன் என்பதற்கு நீண்ட ப்ளாஷ் பேக். 
அஜித்துக்கு புலிபோல் பதுங்கி புயல்போல் பாயும் வேடம். அக்ரஹார ஆழ்வார் அம்பியாக வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் உறுத்தாமல் வெளிப்படுகிறது இவரது நடிப்பு. ரவுடிகளை துவசம் செய்யும் போது வெளிப்படுகிற ஆக்ரோஷம், கடவுள் வேடமணிந்து ரவுடிகளை கொலை செய்யும்போது காணாமல் போகிறது. முக்கியமாக க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் நரசிம்ம அவதாரம்.
அஜித் தங்கியிருக்கும் மேன்சனின் ஓனராக மனோரமா. இவரது பேத்தியாக அசின். பாடல் தேவைப்படும் போது படத்தில் தோன்றி மறையும் வழக்கமான தமிழ் கதாநாயகி. கொடுத்ததை திருப்தியாக செய்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையில் சத்தம் அதிகம். டெலிபோன் ஒலிப்பதை கூட அணுகுண்டு வீசிய எபெக்டில் பின்னணி இசை சேர்த்து காட்டியிருக்கிறார்கள். பாடல்களில் 'மயிலே மயிலே இறகு போடு...' மற்றும் 'சொல்லித்தரவா...' பாடல்கள் தேறுகின்றன. பாடல்களில் பயன்படுத்தியிருக்கும் கிராபிக்ஸ், அளவுக்கு மீறிய அமிர்தம்!
இயக்குனர்களை பொறுத்தே கேமராமேனின் திறமை வெளிப்படும் என்பதற்கு ரமேஷ் Gee யின் ஒளிப்பதிவு சிறந்த உதாரணம். லைட்டிங்கில், கேமரா கோணத்தில் அதிக புதுமையில்லை. அஜித்தை போலீஸ் அதிகாரி துரத்தும் காட்சியில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
வசனம் ரவிமரியா. கதாபாத்திரங்கள் தாங்கள் செய்ததை, செய்யப் போவதை, தாங்கள் நினைப்பதை என அனைத்தையும் அருகிலிருப்பவரிடம் பேசுவது போல் ஆடியன்ஸிடம் விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள். சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை எப்போது உணரப் போகிறார்கள்?
பல காட்சிகளை ஒரே லொகேஷனில் படம் பிடித்திருப்பது அலுப்பு. உதாரணமாக, அஜித் பிணங்களை அடுக்குவது, கீர்த்தி சாவ்லாவுடன் பேசுவது, பணம் கேட்கும் வாட்மேனை அடிப்பது என முக்கால்வாசி மருத்துவமனை காட்சிகள் காரிடர் போன்ற ஒரேயிடத்தில் நடக்கிறது. அசின், விவேக் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் நடப்பது மேன்சனில் இருக்கும் உள் முற்றத்தில்!
படத்தில் லாஜிக் மீறல்கள் அதிகம். பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் முகமெல்லாம் நீல சாயம் பூசி கிருஷ்ணர் வேடத்தில் கொலை செய்கிறார் அஜித். அதே போல் ரவுடிகளை அடித்து விட்டு வில்லன் லாலை தேடி வருவதற்குள் நரசிம்ம கெட்டப்புக்கு மாறி விடுகிறார். மேக்கப் கிட்டை கையோடு எடுத்து வந்திருப்பாரோ?
வில்லனை அவனது அபார்ட்மென்டில் வைத்து அஜித் கொலை செய்யும் போது எழும் சத்தம் வெளியே தெருவில் காருக்குள் அமர்ந்திருக்கும் கீர்த்தி சாவ்லாவை திடுக்கிட வைக்கிறது. ஆனால், மற்ற அபார்ட்மென்ட் வாசிகளுக்கு அந்த சத்தம் கேட்டதாகவே தெரியவில்லை. 
கோடியில் புரளும் வில்லனின் ஆள்கள் கூசாமல் கொலை செய்கிறார்கள். அதே ஆள்கள் பத்து குடம் சாராயம் கடத்த ப்ரைம் மினிஸ்டரை கடத்தும் ரேஞ்சுக்கு திட்டம் போடுவதும் போலீசுக்கு பயந்து நடுங்குவதும் நகை முரண்.
இன்னொரு காட்சியில் அஜித்துடன் ஷாப்பிங் கிளம்பும் போது அசின் போட்டியிருக்கும் காஸ்ட்யூம் அவர் தெருவுக்கு வரும் போது மாறிவிடுகிறது. லாஜிக் மீறல்களுடன் இது போன்ற கன்டினியுட்டி மீறல்களும் படத்தில் உண்டு.
அஜித் தன்னை கடவுளின் அவதாரம் என்று நம்புவதும், அதை நிரூபிப்பது போல் அசுர பலத்துடன் எதிரிகளுடன் மோதுவதும் ஆன்மிக சறுக்கல் மட்டுமின்றி படத்தின் அடிப்படை சறுக்கலும் கூட!
கதை, திரைக்கதையை ஷெல்லா இன்னும் நல்லா அமைத்திருக்கலாம்!
| +++++பிளஸ்++++++++ |
| அஜித் |
| -----மைனஸ்---------- |
லாஜிக் இல்லாத காட்சிகள்
ப்ளாஷ்பேக்கின் நீளம்
அவதார பூச்சுற்றல்கள் |
|