இயேசுவா முஹம்மதுவா?

உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு


ஆசிரியர்: சைலஸ்

முன்னுரை

கிறிஸ்துவ‌த்தை இயேசுவும் இஸ்லாமை முஹம்மதுவும் ஸ்தாபித்தார்க‌ள். இவ்விர‌ண்டும் முறையே 180 கோடி ம‌ற்றும் 110 கோடி உறுப்பின‌ர்க‌ளைக் கொண்ட‌ இரு மாபெரும் ம‌த‌ங்க‌ளாகும். என‌வே சந்தேக‌மின்றி இவ்விருவ‌ரும் மனிதர் மத்தியில் மிக வ‌ல்ல‌மையானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ளாக‌ இவ‌ர்க‌ள் ம‌னித‌ வாழ்க்கைக்காக பல கோட்பாடுகளை முன் வைத்துள்ள‌ன‌ர்.

இவ்விரு மார்க்கங்களிலும் பல விஷயங்கள் பொதுவாக உள்ளன. ஆனால், ஏனைய காரியங்களில் முற்றிலும் வேறுபடுகின்றன. இவைகளை ஸ்தாபித்தவர்களின் குணாதிசயங்கள் எவ்விதமாய் உள்ளன? அவர்களின் ஒப்பீடுகள் எவ்வண்ணம் உள்ளன? இயேசுவைப் பற்றி குர்‍ஆனும் பைபிளும் சொல்வது என்ன? அவர்களின் போதனைகளும் செய்கைகளும் அவர்களைப் பின்பற்றுவோரை எவ்விதம் நடக்கத் தூண்டுகின்றன? இந்தக் கட்டுரை அவர்களின் சில போதனைகளையும் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு அவைகளின் வேறுபாடுகளை ஆராய்ந்து இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.

குறிப்பு: இக்கட்டுரையில் பயன்படுத்திய பைபிள் வசனங்கள் இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்ட தமிழ் பைபிளாகும்[1]. குர்‍ஆன் தமிழாக்கம் ஜான் டிரஸ்ட் வெளியிட்ட மொழியாக்கமாகும்[2]. ஹதீஸ்களாகிய புகாரி[3], முஸ்லீம்[4] போன்றவைகளிலிருந்தும், இபின் இஷாக்கின் "சீரத் ரசூலுல்லாஹ்[5]" மற்றும் தபரியின் சரித்திரத்திலிருந்தும்[6], சுனன் அபூ தாவுத்[7] போன்றவைகளிலிருந்தும் மேற்கோள்கள் கொடுத்துள்ளேன். முஹம்மதுவின் சொல் மற்றும் செயல் பற்றிய விவரங்கள் உள்ளடக்கிய ஹதீஸ்களாகிய புகாரி மற்றும் முஸ்லீமை இஸ்லாமிய அறிஞர்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாக கருதுகிறார்கள். அதே போல, இபின் இஷாக்கின் "சீரத் ரசூலுல்லாஹ் - முஹம்மதுவின் வாழ்க்கை சரிதை" மற்றும் தபரியின் "சரித்திரம்" போன்றவைகள் இஸ்லாமிய சமுதாயத்தினால் நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது.

அவர்களின் இறுதி வார்த்தைகளில் சில:

இயேசு: தாம் காட்டிக் கொடுக்கப்பட்டு தக்க காரணமின்றி மரண தண்டன வழ‌ங்கப்பெற்று கல்வாரிச் சிலுவையில் மரணமடையும் போது அவ‌ர் "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23:34) என‌க் கூறினார்.

முஹம்மது: நபி (ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது ".....இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்!" எனக் கூறினார்…” புகாரி, (பாகம் 1, அத்தியாயம் 8, எண் 435)

[பல வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்களால் கொலைசெய்யப்பட்டு கணவனை இழந்த ஒரு யூதப் பெண்மணியால் முஹம்மதுவிற்கு விஷம் வைக்கப்பட்டது, அந்த விஷ‌ம் சிறிது சிறிதாகத் தன் வேலையைச் செய்தது. தமது மனைவி ஆயிஷாவின் மடியில் அவர் உயிரை விடும் போது அவர் இவ்விதம் கூறினார்].

விளக்கம்

இவ்விருவ‌ரின் வாழ்க்கையை நான் ஆராய்ந்து பார்க்கும் போது அவ‌ர்க‌ளின் குணாதிச‌ய‌ங்க‌ளில் சில உறுதியான‌ வித்தியாசங்களைக் காண்கிறேன். அவ‌ர்க‌ளின் இறுதி நிலைப்பாட்டினை எடுத்துண‌ர்த்தும் ம‌ர‌ண‌ வாக்குமூல‌ம் இது தான். அதில் கிறிஸ்து த‌ம‌து ப‌கைவ‌ர்க‌ளை ம‌ன்னிக்கும்ப‌டி தேவ‌னிட‌ம் வேண்டிக்கொள்கிறார், ஆனால் முஹம்மதுவோ அவரது நபித்துவத்தினை நிராக‌ரித்தோர் மீது க‌ச‌ப்பான‌ சாப‌ங்க‌ளை உச்ச‌ரிக்கின்றார். முஹம்மது, தாம் சாகும்போது அல்லாஹ்விடம் கிறிஸ்துவ‌ர்க‌ளையும் யூத‌ர்க‌ளையும் ந‌ல்வ‌ழியில் ந‌ட‌த்த‌ வேண்டிக் கொண்டிருந்தால் அது மிக‌வும் பொருத்த‌மான‌தாய் இருந்திருக்கும‌ல்ல‌வோ?

அடிமைத்தனம்

இயேசு அடிமைகள் யாரையும் வைத்திருக்கவில்லை. அவர், பிறர் நமக்கு என்ன செய்யவேண்டும் என நாம் விரும்புகிறோமோ அவைகளையே பிறருக்குச் செய்ய வேண்டும் எனப் போதித்தார். அவரிடம் அடிமைகள் இல்லை. எனவே அவரது போதனைகளின்படி அவர் ஒருபோதும் அடிமைகளை வைத்திருக்க மாட்டார் என்பது வெளிப்படை. அவர் மனிதர்களை அடிமைப்படுத்தாமல் அவர்களை விடுவித்தார். ஒருவரும் அடிமைத்தனத்தை விரும்புவதில்லை.

1 தீமத்தேயு 1: 8-10 வசனங்களில் பவுல் இவ்வண்ணமாய்க் கூறுகிறர்:

"ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், வேசிக்கள்ளருக்கும், ஆண் புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும் (Slave Traders), பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,".

இந்த வசனங்களினின்று, பலாத்காரமாய் மக்களை அடிமைப் படுத்துதல் கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரானவை எனக் காண்கிறோம்.

முஹம்மது ஒரு அடிமைப்ப‌டுத்துப‌வ‌ர். அவ‌ர் ஆண்க‌ளும் பெண்க‌ளுமான‌ ப‌ல‌ அடிமைக‌ளை வைத்து இருந்தார், அவ‌ர்களை விற்க‌வும் செய்தார். மேலும் அவர், அல்லாஹ் அவ‌ரையும் அவ‌ர‌து இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் பெண் அடிமைக‌ளுட‌ன் தாங்கள் விரும்பும்போது உட‌லுற‌வு வைத்துக்கொள்ள‌ அனும‌தித்து இருந்தார் என‌க் கூறியுள்ளார், ஆதார‌ம் சூரா 33:50, 52, 23:5, ம‌ற்றும் 70:30. இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு போர் (raids) அடிமைக‌ள் கொள்ளைப் பொருளாக‌க் க‌ருத‌ப்ப‌ட்ட‌ன‌ர். இத‌னால் அவ‌ர்க‌ள் இஸ்லாமிய‌ரின் உட‌மைக‌ளாக‌க் கருதப்பட்டனர். ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை அடிமைப் ப‌டுத்தி முஹம்மது பெருமை பாராட்டிக்கொண்டார்.

மாபெரும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி, முஹம்மது தம்முடைய அடிமைப் பெண்ணாகிய மரியாவுடன் உடலுறவு கொண்டதாக எழுதியுள்ளார். "அவள் அவரது உடமையாக (சொத்தாக) இருந்தபடியினால் அவளுடன் உடலுறவு கொண்டார்" என தபரி வால்யூம் 39, பக்கம் 194ல் காண்கிறோம்.

முஹம்மது தாம் எதிர்த்துப் போரிட்டவர்களை அடிமைகளாக்கினார். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், பானுகுரைதா யூதர்களில் பெண்களையும், பிள்ளைகளையும் அடிமைகளாக எடுத்துக்கொண்டு, எஞ்சிய‌ 800 ஆண்களை (இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை) படுகொலை செய்த நிகழ்ச்சியாகும், சூரா 33:26. சீரத் ரசூலுல்லா என்ற முஹம்மதுவின் ஆர‌ம்ப‌கால‌ வாழ்கை வ‌ர‌லாறு இது ப‌ற்றி ப‌க்க‌ம் 461 முத‌ல் மேலும் த‌க‌வ‌ல்க‌ளைத் த‌ருகின்ற‌து. ப‌க்க‌ம் 466 ல், இபின் இஷாக், இப்ப‌டுகொலைக்குப் பின் நடந்த‌ன‌வ‌ற்றை எழுதுகிறார்:

"பின்பு இறைத்தூதர், பானுகுரைஷாவினரின் உடமைகளையும் மனைவியினரையும் பிள்ளைகளையும் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டுக்கொடுத்தார்கள். அந்நாளில், குதிரைகளிலும் மனிதர்களிலும் தாம் ஐந்தில் ஒரு பங்கினை எடுத்துக் கொண்டதற்கான அறிவிப்பினைச் செய்தார்கள். (போரின் அனைத்துக் கொள்ளையிலும் முஹம்மதுவும் அவரது குடும்பத்தினரும் ஐந்தில் ஒரு பங்கினைப் பெற்றார்கள்).... பின்பு இறைத்தூதர் சையத்திடம் . . .உடன் தாம் கைப்பற்றிய பானுகுரைஷிய பெண்களை நஜ்ஜுக்கு (Najd) அனுப்பி அவர்களை குதிரைகளும் ஆயுதங்களும் வாங்குவதற்காக விற்றார்கள்".

முஹம்மது ஏராளமான அடிமைகளை வைத்திருந்ததாக புகாரி பதிவு செய்துள்ளார் (தொகுப்பு. 5, # 541 & தொகுப்பு. 7, # 344) முஹம்மதுவிடம், நீக்ரோ, அரேபிய, எகிப்திய, யூத, கிறிஸ்தவ மற்றும் அராபிய மாற்று மத ஆண், பெண் அடிமைகள் இருந்தனர்.

அடிமைகள் கொடூரமாக அடிக்கப்பட முஹம்மது அனுமதித்தார். அவரது மனைவி விபச்சாரக் குற்றச்சாட்டில் பரிசோதிக்கப்பட்ட நேரத்தில், முஹம்மதுவின் மருமகன் அலி, முஹம்மதுவின் முன்னிலையில் ஆயிஷாவின் அடிமைப் பெண்ணை ஆயிஷாவினைப் பற்றிய உண்மையினைச் சொல்லும்படியாக மிருகத்தனமாக அடித்தார். இபின் இஷாக்கின் "Sirat Rasulallah" விலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட, "The Life of Muhammad by A. Guillaume”, பக்கம் 496 லிருந்து:

"எனவே இறைத்தூதர், விசாரிப்பதற்காக புரைராவை (Burayra - ஆயிஷாவின் அடிமைப் பெண்ணை) கூப்பிட்டார். அப்போது அலி எழுந்து, "இறைத்தூதரிடம் உண்மையைச் சொல்...." எனக்கூறி அவளை பலமாக அடித்தார்".

அலி அந்த அடிமைப் பெண்ணை அடிப்பதை முஹம்மது தடுக்கவில்லை.

புதிதாய்ப் பிடித்த பெண் போர்க் கைதிகளை உடலுறவிற்காய் பயன்படுத்திக் கொள்வதை முஹம்மது அனுமதித்தார்.

சஹீஹ் முஸ்லீம் (தொகுப்பு 2, #3371) ஹதீஸிலிருந்து:

அபூ சைய்து அல்குத்ரி அபூ சிர்மாவிடம் கூறியதாவது. "அபு சைய்துவே, அல்லாவின் தூதர், பெண்ணிடம் உறவுகொள்ளும்போது அவள் கருவுற்றுவிடாதபடி நடந்துகொள்ளுதல் (al-azl - coitus interruptus) பற்றிக் கூறியதை அறிவீரோ?" அதற்கு அவன் ஆம் என்று கூறி மேலும் சொன்னதாவது: "நாம் அல்லாவின் தூதருடன் மஸ்தலிக்கு போரிடச் சென்று அற்புதமான அரேபியப் பெண்கள் சிலரைச் சிறையெடுத்து வந்தோம். நங்கள் எங்க‌ளின் மனைவியர் இல்லாததினால் ஏற்பட்ட‌ மோகத்தினால் அவதியுற்று அவர்களுடன் உறவுகொள்ள விரும்பினோம். (அதே நேரத்தில்) நாம் அவர்களை விற்று அப் பணத்தை அடையவும் விரும்பினோம். எனவே அவர்களுடன் al-azl (coitus interruptus, பெண்ணிடம் உறவுகொள்ளும் போது அவள் கருவுற்றுவிடாதபடி நடந்துகொள்ளுதல்) முறையில் உடலுறவு கொள்ளத் தீர்மானித்தோம். ஆயினும் நாங்கள் சொல்லிக்கொண்டோம்,"நாம் ஒரு செயலைச் செய்கிறோம், ஆனால் நம்முடன் இறைத்தூதர் இருக்கிறார்; எனவே நாம் அவரிடம் கேட்டால் என்ன?" அல்லாவின் தூதரைக் கேட்டபோது அவர் சொன்னார், " நீங்கள் அதனைச் செய்யாவிடினும் பரவாயில்லை; ஏனெனில் இறுதித் தீர்ப்பின் நாள் வரை பிறக்க வேண்டிய‌ ஒவ்வொரு உயிரும் பிறந்தே தீரும்".

சஹீஹ் முஸ்லீம் தொகுப்பு 3, #3432 என்ற ஹதீஸிலிருந்து:

ஹுனைன் போரில் (Battle of Hunain), அல்லாஹ்வின் தூத‌ர் அடஸுக்கு (Autas) ஒரு ப‌டையை அனுப்பி எதிரிக‌ளைச் சந்தித்து அவ‌ர்க‌ளுட‌ன் போரிட்டார் என‌ அபூ சைய்து அல்குத்ரி தெரிவித்தார். அவ‌ர்க‌ளை வென்று அடிமைக‌ளாக‌ப் பிடித்த‌ பின்பு, அல்லாஹ்வின் தூத‌ருடைய‌ தோழ‌ர்க‌ள், பிடிக்க‌ப்ப‌ட்ட‌ அடிமைப் பெண்க‌ளுட‌ன் உட‌லுற‌வு கொள்வ‌தைத் த‌விர்த்து இருந்தார்க‌ள். ஏனெனில் அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ன்மார் பல மாற்று தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளாய் இருந்தார்கள். அத‌ன் பின்பு மேன்மைமிகு அல்லாஹ் அது ப‌ற்றிய‌ வ‌ச‌ன‌த்தை இற‌க்கினார்:

"இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது." (குர்‍ஆன்: 4:24)

(அதாவ‌து அவ‌ர்க‌ளது இத்தா (Idda) மாத‌வில‌க்கு நாட்க‌ள் முடிந்த‌பின்பு அவர்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள்).

விளக்கம் :

இயேசுவினுடைய போதனைகள் மக்களை பலவந்தமாக அடிமையாக்குவதைத் தடுத்தன. லூக்கா 6:31 ல் "மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்." எனச் சொல்லப்படுகிறது. இதற்கு நேர் எதிராக‌, முஹம்மதுவும் அவரின் படை வீரரும் வலியச் சென்று பலரைத் தாக்கி, பலவந்தமாக அடிமைப்படுத்தினர். அதிலும் மோசமாக, முஹம்மது, அடிமைகளின் குடும்பங்களைப் பிரித்து அவரது படை வீரர்களிடையே பங்கிட்டுக்கொடுத்து பெண் அடிமைகள் அவர்களால் கற்பழிக்கப்பட அனுமதித்தார்.

பாவம்:

இயேசு: பாவமின்றிப் பிறந்தார்; பாவமற்ற வாழ்கை வாழ்ந்தார். அவரது பாவமற்ற வாழ்வினை உறுதி செய்தார். யோவான் 8:46 - "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" என்றார். மேலும் 2 கொரிந்தியர் 5:21, 1 யோவான் 3:5, மற்றும் எபிரேயர் 4:15 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.

முஹம்மது: ஒரு பாவியாகப் பிரகடனப் படுத்தப்படுகிறார், சூரா 40:55 - "ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!".

சூரா 48:1,2 - "(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம். உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்….".

முஹம்மதுவும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட இறைவனை வேண்டினார்.

புகாரி தொகுப்பு 9, #482: "ஓ அல்லாஹ், என் கடந்தகாலப் பாவங்களையும் அல்லது வருங்காலங்களில் செய்யும் பாவங்களையும், இரகசியத்திலோ அல்லது வெளிப்படையாகவோ செய்யும் பாவங்களையும் மன்னித்தருளும்."

"...O Allah! Forgive me the sins that I did in the past or will do in the future, and also the sins that I did in secret or in public.”

மேலும், முஹம்மது, தான் நியாயமற்ற முறையில் மனிதர்களை சபித்தும், பாதிப்படையச் செய்தும் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

சஹீஹ் முஸ்லீம் தொகுப்பு 4, "The Book of Virtue and Good Manners, and Joining the Ties of Relationship, chapter MLXXV” என்ற புத்தகத்திலிருந்து:

அல்லாஹ்வின் தூத‌ர் எவ‌ர்மீது சாப‌ங்க‌ளைக் கொடுத்தாரோ அவ‌ர் அத‌ற்குத் த‌குதியாய் இல்லாத‌ ப‌ட்ச‌த்தில், அவ‌ருக்கு அது க‌ருணையாயும் வெகும‌தியின் ஊற்றாயும் இருக்கும்.

"HE UPON WHOM ALLAH'S APOSTLE INVOKED CURSES WHEREAS HE IN FACT DID NOT DESERVE IT, IT WOULD BE A SOURCE OF REWARD AND MERCY FOR HIM".

ஹதீஸ் #6287 அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அபு ஜுரைரா சொன்னது: "ஓ அல்லாஹ், நான் ஒரு மனிதன். முஸ்லிம்களில் ஏதாவது ஒரு மனிதனை நான் சபித்து இருந்தாலோ அல்லது கசையடி கொடுத்து இருந்தாலோ அதனை தூய கருணையின் ஊற்றாக மாற்றுவீராக."

விளக்கம்

இயேசு பாவமற்றவர் தேவனின் குமாரன். முஹம்மது, தான் ஒரு தீர்க்கதரிசி என்று சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒரு இறைவாக்கினர். அதாவது நல்ல மற்றும் தீய பண்புகளைக் கொண்ட, தவறுகளையும் பாவங்களையும் செய்யத்தக்க ஒரு மனிதன். சில சம‌யங்களில் அவர் கருணை உள்ளம் கொண்டவராகவும் சில சமயங்களில் சபிக்கவும் பலரை காயமடையச் செய்பவராகவும் இருந்தார். இவர்களின் இயல்பும் பண்பும் எந்த அளவிற்கு அவர்களின் மார்க்கங்களுக்குள் ஊடுருவியிருக்க முடியும்? இயேசு பாவமற்ற பரிசுத்தர். முஹம்மதுவோ தாம் தமது பாவங்க‌ளுக்காக மன்னிப்பை ஒரு நாளைக்கு 70,000 முறை வேண்டிக்கொண்டதாக அவ‌ரே சொல்லியுள்ளார்! நீங்கள் யாரைப் பின்பற்றுவீர்கள்?

மனம் திரும்ப விரும்புகின்ற‌ பாவிகளைத் தண்டித்தல்

இயேசு

யோவான் 8: 2 முதல் 11 வரை:

மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.

அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

முஹம்மது

ஹதீஸ் அபூ தாவூத் (Abu Dawud) எண் #4428

புரைதா (Buraidah) சொன்னது: "காமித்தைச் சேர்ந்த ஒரு பெண் நபியிடம் சொன்னாள், "நான் விபச்சாரம் செய்துவிட்டேன்." அதற்கு அவர், "திரும்பிப்போ" என்றுச் சொன்னார். அவள் மறு நாள் மறுபடியும் வந்து, நீங்கள் ஒருவேளை மயிஜ் பி மாலிக்குச் செய்தது போலவே என்னையும் திருப்பியனுப்பவே விரும்பலாம். ஆனால் நான் கர்ப்பமாய் இருக்கிறேன் என அல்லாஹ்வின் நாமத்தில் உறுதியாகச் சொல்கிறேன்" என்றாள். அதற்கு அவர் "திரும்பிப்போ" என்றுச் சொன்னார். அவள் மறு நாள் திரும்பவும் அவரிடம் வந்தாள். அவர் அவளிடம் சொன்னார், "நீ பிள்ளை பெறும்வரை திரும்பிப் போ". அவள் திரும்பிச் சென்றாள்.

அவள் ஒரு பிள்ளையைப் பெற்ற போது அந்தப் பிள்ளையை அவரிடம் கொண்டு வந்தாள். அவள்,"இதோ, நான் பிள்ளையைப் பெற்றுவிட்டேன்" என்றுச் சொன்னாள். அதற்கு அவர், "நீ திரும்பிச் சென்று அது பால்குடி மறக்குமட்டும் அதற்குப் பால் கொடு" என்றுச் சொன்னார். அவள் அவனைப் பால்குடி மறக்கப் பண்ணின பின்பு, அவன் கையில் ஒரு பண்டத்தைச் சாப்பிடக்கொடுத்து, அவரிடம் அவனைக் கொண்டு வந்தாள். அந்தப் பையன் ஒரு முஸ்லிம் ஆளிடம் ஒப்படைக்கப்பட்டான்.

நபி அவளைக் குறித்துக் கட்டளையிட்டார். அவளுக்காக ஒரு குழி வெட்டப்பட்டது. அவள் சாகும் வரை கல்லெறியப்படவேண்டும் என்று நபி கட்டளையிட்டார். காலித் என்பவன், அவளைக் கல்லெறிந்தவர்களுள் ஒருவன். ஒரு கல்லை அவன் அவளை நோக்கி எறிந்தபோது, ஒரு துளி இரத்தம் அவன் கன்னத்தில் பட்டது,அவன் அவளைச் சபித்தான். அதற்கு நபி அவனிடம் சொன்னார்,"நிதானமாக‌ச் செய் காலித். அவள் மனம் திரும்பிவிட்டாள். அவளை அதிகமாக தண்டிப்பவர் அவளைப் போன்றே அதற்காக மனம் திரும்பும்போது அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்." பின்பு அவர் அவளைக் குறித்துக் கட்டளையிட்ட பின்பு அவளின் உடல்மீது பிரார்த்தனை பண்ணினார். அவள் அடக்கம் செய்யப்பட்டாள்.

விளக்கம்

இவ்விருவரிடமும் (இயேசு, முஹம்மது) காணப்படும் தெளிவான வித்தியாசம் இதுதான். இயேசு விபச்சாரப் பெண் குறித்த நடவடிக்கையில், அவளைத் தண்டிக்கவில்லை. அவள் திரும்பிச்சென்று பாவமற்ற வாழ்கை வாழும்படி ஆணையிட்டார், அவள் மீட்கப்பட ஒரு வாய்ப்பளித்தார். கருணையின் உதாரணம் இதுவே.

எத்தனை பேர் தவறான பாதையில் சென்று பின்பு பல ஆண்டுகளுக்குப் பின் தங்க‌ள் வாழ்கையை முற்றிலுமாக மாற்றி நல்லவர்களாக வாழ்ந்துள்ளனர் என்று உங்களுக்குத் தெரியுமா? அது மட்டுமின்றி, மற்றவர்களும் தங்களின் வாழ்வினை மாற்றி அமைத்துக்கொள்ள இவர்கள் உதவியுள்ளனர்? இயேசு இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தினை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். சட்டத்தின்படி, யூதர்கள் அவளை கல்லெறிந்து கொன்றிருக்கலாம்; ஆனால் இயேசுவின் அன்பும் கருணையும் அதைவிட மகத்தானது.

முஹம்மதுவின் அனுகுமுறை முற்றிலும் மாறுப‌ட்ட‌து. முத‌லாவ‌து அந்த‌ விப‌ச்சார‌ப் பெண்ணை விர‌ட்டிவிட்டார். அவ‌ள் அவ‌ள‌து பாவ‌த்தினை அவ‌ரிட‌ம் அறிக்கையிட்டாள். அவ‌ரோ அத‌னைக் கேட்க‌வோ அது குறித்து எதுவும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வோ ம‌றுத்தார். மாறாக‌ அவ‌ளை விர‌ட்டிய‌டித்தார். மூன்று முறை இவ்வித‌ம் ந‌டைபெற்ற‌து. மூன்று த‌ர‌ம் இந்த‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌த்தைத் தவிர்க்க‌ முஹம்மது முற்ப‌ட்டார். இறுதியாக‌ அப்பெண்ணின் பிடிவாதமான ஒப்புக்கொடுத்தலின் பேரில், முஹம்மது அவளது பாவப் பிரச்சினையை எதிர்கொள்ள முடிவெடுத்தார். அவ‌ள் பிள்ளை பெற‌வும் அத‌ற்குப் பால் குடி ம‌ற‌க்க‌ப்ப‌ண்ணும் வ‌ரையிலும் அனும‌தித்தார். இத‌ற்கு ஒன்று முத‌ல் மூன்று ஆண்டுக‌ளாவ‌து ஆகியிருக்கும். அத‌ன் பின்பு திரும்பிய‌ அவ‌ளை கொலை செய்ய‌ப்ப‌ட‌ முஹம்மது ஒப்புக்கொடுத்தார்.

இந்த‌ப்பெண் குற்ற‌த்தை ஒப்புக்கொண்ட‌துட‌ன் ம‌ட்டுமின்றி அத‌ற்காக‌ ம‌ன‌ம் வருந்தினாள். அவ‌ள் அவ‌ள‌து பிள்ளைக்கு ஒரு ந‌ல்ல‌ தாயாக‌வும் ச‌மூக‌த்தில் ஒரு பொறுப்பான குடிம‌க‌ளாக‌வும் காண‌ப்ப‌டுகிறாள். முஹம்மது அவ‌ளுக்கு, அவ‌ர், ப‌ல‌ பேர்க‌ளுக்கு ப‌ல‌வித‌மான பாவ‌ங்க‌ளுக்காக‌ ம‌ன்னித்த‌து போல‌ ம‌ன்னிப்பு வ‌ழ‌ங்கியிருக்க‌ முடியாதா? முஹம்மது ப‌ல‌ரின் பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌ட‌ அனும‌தித்துள்ளார். த‌ங்க‌ளின் சொந்த‌ குடும்ப‌த்தினையே கொலை செய்த‌வ‌ர்க‌ள் கூட‌ முஹம்மதுவின் ந‌பித்துவ‌த்தினையும் கடவுளின் ஏகத்துவத்தினையும் ஒப்புக்கொண்ட‌தின் பேரில் ம‌ன்னிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனால் முஹம்மதுவினால் இந்த‌ப் பெண்ணிட‌ம் க‌ருணையுட‌ன் நடந்து கொள்ள‌ முடிய‌வில்லை. அவ‌ர் குறுகிய‌ பார்வை கொண்ட‌வ‌ர். அவ‌ள் வாழ்கையை முற்றிலும் மாற்றி அமைத்துக் கொண்ட‌வ‌ள் என்றும் முறையாகத் தன் குழந்தையை வளர்த்துள்ளவள் என்றும், சரியானதையே செய்தாள் என்றும் காணத் தவறிவிட்டார். முஹம்மதுவின் குறுகிய‌ க‌ண்ணோட்ட‌ம் அவ‌ள‌து சாவிற்குக் கார‌ண‌மாயிற்று.

இதை முஹம்மது யூதச் சட்டத்தின்படிக் கூட அனுகவில்லை. மோசேயின் நியாயப் பிரமாணத்தின்படி விபச்சாரம் செய்தவர் கல்லெரிந்து கொல்லப்படுதல் வேண்டும். முஹம்மது இவ்விதம் செய்யவில்லை. அவளை, முஹம்மது , பல ஆண்டுகள் வாழ அனுமதித்தார். அவள் பிள்ளை பெறும்படி தாற்காலிகமாக அவளை அனுமதித்து இருந்தாலும் கூட முஹம்மது அந்தப் பிள்ளை பால் குடி மறக்குமட்டும் பொறுத்திருந்தார். நிச்சயமாகவே அக்குழந்தையைப் பராமரிக்க வேறு பெண்கள் இருந்திருக்கக் கூடும். முஹம்மது அவருக்குத் தெரிந்த விதத்தில் நலமாகவோ அல்லது மாறாகவோ இந்த நிலைமையைக் கையாண்டிருக்கிறார். அவர் போகிற போக்கில் அவ்வப்போது அவரது சட்டங்களை உருவாக்கியுள்ளார்.

போர் - பகைவர்களை எதிர்கொள்ளுதல்

இயேசு, லூக்கா 9:54,55 ல், அவரை நிராக‌ரித்த‌ ந‌க‌ர‌த்தை நிர்மூல‌மாக்க‌ விரும்பிய‌ த‌ம‌து சீஷ‌ர்க‌ளைக் கடிந்து கொண்டார். மேலும் லூக்கா 22:52 ல், சீஷ‌ர்க‌ள், இயேசுவைக் கைது செய்ய‌ வந்த‌வ‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டையிட்ட‌ போது அவ‌ர்க‌ளைத் த‌டுத்து அந்த‌ கைக‌ல‌ப்பில் காய‌முற்ற‌ ஒரு ம‌னித‌னைக் குண‌ப்ப‌டுத்தினார்.

முஹம்மது, சூரா 9:5 ம‌ற்றும் 9:29 ல், இஸ்லாமியரல்லாதவர்கள் மீது க‌டும் போர் புரியும்படிச் சொல்லியுள்ளார். சூரா 9 என்பது முஹம்மது இறுதியாகக் கொடுத்த சூராக்களில் ஒன்றாகும். ஆரம்பகாலத்தில் முஹம்மதுவின் கூட்டத்தின‌ர் மிக‌வும் ப‌ல‌வீனமாக‌ இருந்த‌போது, அவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் இசைந்து வாழும்ப‌டி க‌ட்ட‌ளையிட்டு இருந்தார். ஆனால் பிற்கால‌த்தில் முஸ்லீம்கள் ப‌ல‌மடைந்த‌போது, இஸ்லாமை, பலாத்காரத்தின் மூல‌ம் ப‌ர‌ப்ப‌ ஆணையிட்டார். அபுப‌க்க‌ர், உம‌ர் ம‌ற்றும் உத்மான் ஆகியோர் அவ‌ர‌து ஆக்கிர‌மிப்புப் போர்களைத் தொடர்ந்து நடத்தினர். முஹம்மதுவின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் சில‌:

800 யூத‌ ஆண் போர்க் கைதிக‌ளை ப‌டுகொலை செய்த‌து (சூரா 33:26 ல் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து)

மெக்காவைக் கைப்ப‌ற்றிய‌போது, அவ‌ர், 10 பேர்க‌ளை சிர‌ச்சேத‌ம் செய்யும்ப‌டி ஆணை பிற‌ப்பித்தார். அதில் மூவ‌ர், முன்பு முஹம்மதுவைக் கேலி செய்த‌ அடிமைப் பெண்க‌ள். (பார்க்க‌: "முஹம்மதுவின் வாழ்கை - The Life of Muhammad” பக்கங்கள் 551, 52)

அவர் யூதப் பட்டணமான கைபர் மீது தாக்குதல் நடத்தியபோது, யூதத்தலைவர்களில் ஒருவரை எங்கோ புதைக்கப்பட்டிருந்த பணத்தின் இருப்பிடத்தைச் சொல்லுமாறு சித்திரவதை செய்தார். அந்த மனிதன் அதைச் சொல்ல மறுத்தபோது அவன் மரணிக்கும் தருவாயில் அவனது தலையை வெட்ட ஆணையிட்டார். "முஹம்மதுவின் வாழ்க்கை, (The Life of Muhammad)” ப‌க்க‌ம் 515 ஐப் பார்க்கவும்

விளக்கம்

பல ஆண்டுகளுக்கு முன்பு, தம்மைக் கேலி செய்த பெண் அடிமைகளைக் கொல்லும் காரியத்தில், இயேசுவை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவர் மிகவும் மேலான செய்திகளையும் நலமான வாழும் முறையினையும் கொண்டு வந்தவர். புதைக்கப்பட்ட பணத்தை வெளிக்கொணர ஒரு மனிதனை சித்திரவதை செய்பவ‌ரென இயேசுவை ஒருவரும் கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது. அவரது வாழ்க்கை பேராசைகள் அற்ற ஒரு வாழ்க்கையாக இருந்தது.

முஹம்மது ஒரு மூர்க்க குணமுடைய‌ நபராக‌ இருக்கக் கூடும். தம்மைக் கேலி செய்த பெண்ண‌டிமைகளைக் கொலை செய்தல் நியாயமானதா? அவர்களைக் கொலை செய்வித்தல் ஏற்புடையதா? அது நாகரீகமானதா அல்லது அறிவுடமைதானா? வெறும் பணத்தை அடைவதற்காக ஒரு மனிதனைச் சித்திரவதை செய்தார் முஹம்மது. இப்படிப்பட்ட நபரை ஒரு சமுதாயம் கீழ்படியவும், அவரை ஒரு முன்னோடியாக ஏற்றுக்கொள்ளவும் இவர் தகுதியுடையவராக இருப்பாரா?

பெண்களும் திருமணமும்

இயேசு திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் பெண்களை குணப்படுத்தினார். அவர்களை மன்னித்து ஆறுதல் படுத்தினார். ஆண்கள் அவரவரின் மனைவிமார்களை நேசிக்கவும் அவர்களிடம் கடினமாக நடந்து கொள்ளா வண்ணமும் இருக்க புதிய ஏற்பாடு கற்றுக்கொடுக்கிறது: கொலோசெயர் 3:19, எபேசியர் 5:25.

கலாத்தியர் 3:28, "ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்" என்றும் 1 பேதுரு 3:7, "புருஷர்களே,.........நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து,.....அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்" என்றும் போதிக்கின்ற‌ன‌.

முஹம்மது அவரைப் பின்பற்றும் ஆண்கள், அவர்களின் அடங்காத மனைவிகளை அடிக்கக் கட்டளை கொடுக்கிறார். தொடர்ந்து கீழ்படிய மறுக்கும் தமது மனைவிகளை அடிக்கும் உரிமையை ஆண்களுக்கு வழங்குகிறார்.

சூரா 4:34 "…அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள்…".

மேற்படி வசனம் ஒரு பெண் தனது கணவன் தன்னை முகத்தில் அடித்ததாகவும் அதன் தடம் முகத்தில் இருப்ப‌தாகவும் முஹம்ம்துவிடம் புகார் செய்ததாகக் கூறும் சம்பவத்தின் தொடர்பாக இறக்கப்பட்டது. முதலில் முஹம்ம்து "அவனுடன் சமாதானமாக இரு" என்றுச் சொல்கிறார், பின்பு, "நான் இதுபற்றிச் சற்றுச் சிந்திக்கும்வரை பொறுத்திரு" என்றார். பின்பு தான் இவ்வசனம் இறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முஹம்ம்து , "நாம் (தாமும், அப்பெண்ணும்) ஒன்றை விரும்பினோம் ஆனால் அல்லாஹ் வேறொன்றை விரும்பினான்" என்றுச் சொன்னார்.

இந்த ஹதீஸ் பெண்களைப்பற்றி மேலும் அதிகமாகச் சொல்கிறது:

முஹம்மது, "பெண்கள் பொதுவாகத் தீமையுள்ளவர்களே; நரகத்தில் பெரும்பான்மையானவர்கள் பெண்களே,” எனச் சொல்கிறார். புகாரியைத் தொடர்வோமானால்:

தொகுப்பு 1, #301: "பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்;..."

புகாரி தொகுப்பு 1, #28: ந‌பி சொன்னார், "எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்..."

அவ‌ர்க‌ள் சொர்க்க‌த்தில் சிறுபான்மையின‌ரே என‌ சஹீஹ் முஸ்லிம் சொல்கிற‌து‌

தொகுப்பு 4, #6600: "அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக இம்ரான் உசேன் அறிவித்தார்,"சொர்கத்தில் வசிப்பவர்களில் பெண்கள் சிறுபான்மையினரே ஆவார்கள்"

இவ்விர‌ண்டு ஹ‌தீஸ்க‌ளையும் ஒன்றாக்கிப் பார்ப்போமானால், பெண்க‌ள் சொர்க்க‌‌த்தில் சிறுபான்மையின‌ராகவும் ந‌ர‌க‌த்தில் பெரும்பான்மையான‌வ‌ர்க‌ளாயும் இருக்கின்ற‌ன‌ர் என‌ முஹம்மது சொன்ன‌தாக‌ விள‌ங்கும். இது ஒரு க‌ண‌க்கீட்டின் படியான விகிதாச்சாரமாக இருப்பதாகத் தோன்றவில்லை, அதாவது, அதிக பெண்கள் மற்றும் குறைவான ஆண்கள் உலகத்தில் இருக்கக்கூடும் எனவே, தான் இந்த கணக்கு என்பதல்ல. மாறாக, முஹம்மது பெண்களை ஆண்களைவிட அதிகம் பாவம் செய்யக்கூடியவர்களாகக் கருதினார் என்பதாகவே காணப்படுகிறது. ந‌ர‌க‌த்தில் அதிக‌ம் பெண்க‌ள் காண‌ப்ப‌டக் கார‌ண‌ம், முஹம்மதுவின் வாக்கின் படி பெண்க‌ள் பெரும்பாலும் த‌ம் க‌ண‌வ‌ருக்கு துரோக‌ம் செய்யும் இயல்பினர் என்ப‌தே!

பெண்கள் ஆண்களைவிட அறிவில் குறைந்தவர்கள் எனவும் முஹம்மது அறிவித்துள்ளார்:

புகாரி தொகுப்பு 1, #301:

"……நபி (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது;…"

விளக்கம்

தேவனின் பார்வையில் பெண்ணும் ஆணும் சரிசமம் என இயேசுவின் போதனை சொல்கிறது."ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்". சமுதாயக் கண்ணோட்டத்தில் தேவனின் கிருபையின் படி இயேசு அவர்களைக் கையாண்டார்.

முஹம்மது, பெண்களை, அடிமைக்கும் சுதந்திரமான மனிதருக்கும் இடையில் வைத்தார். இன்றும் கூட இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் இரண்டாந்தர மக்களாகவே ஆண்களின் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகிறார்கள். இது முஹம்மதுவின் போதனைகளில் பெண்களுக்கு அவர் அளித்த இடம் கருதியே ஆகும்.

கிறிஸ்துவின் அடையாளம்

இயேசு தாம் தேவ குமாரன் எனச் சொன்னார், காண்க‌: யோவான் 5:18-27, 10:36, மத்தேயு 26:63, 64.

அப்பொழுது அவர் (இயேசு) நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். (மத்தேயு 16: 15-17)

தேவனின் வார்த்தையே இயேசு

"அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." (யோவான் 1:14)

இறைவனாகிய இயேசு

"கிறிஸ்து இயேசு…அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." (பிலிப்பியர் 2:5-7)

முஹம்மது, இயேசு தேவ குமாரன் அல்ல என்றுச் சொல்லியிருக்கிறார். நபிகளுக்குள் குர்‍ஆன் வேறுபாடு காணவில்லை; இயேசுவும் ஒரு நபியை விட மேன்மையானவர் இல்லை:

சூரா 5:75 "மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர்...."

இயேசுவின் தெய்வீக ஆதாரத்தினை குர்‍ஆன் மறுக்கிறது:

சூரா 43:59: "அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.."

சூரா 3:59: "அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்."


விளக்கம்

இயேசு ஒரு பெரிய தீர்க்கதரிசியாக, ஒரு போதகராக, தாம் தேவகுமாரனென்றும், தேவனின் வார்த்தை என்றும், மேசியா என்றும் மனிதனாக வந்த இறைவன் என்றும் போதித்தார். முஹம்மது இதனை மறுத்தார். இயேசு ஒருவேளை உண்மை சொல்லியிருக்கவேண்டும் அல்லது அவர் ஒரு பொய்யராகவோ பைத்தியக்காரராகவோ இருக்கவேண்டும். அவர் யார் என்ற அடையாளத்தைக் குறித்து இருவரும் (இயேசு, முஹம்மது) சொல்வதும் சரியாக இருக்க முடியாது. ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். முஹம்மது இயேசுவிற்கு அறுநூறு ஆண்டுகளுக்குப் பின் பாலைவனங்களில் அலைந்து திரிந்து கொண்டு வெளிப்பாடுகளைச் சொல்லி வந்தார். அவர் கூறுவது பற்றிய‌ ஆதாரம் சிறிதளவும் இல்லை. இறைவனின் வார்த்தை தான் என அவர் ஒப்புக்கொள்ளும் பைபிள் கூறுவனவற்றிற்கு எதிராக அவர் பல கருத்துக்களைச் சொல்லுகிறார்.

இயேசு வணங்குதற்குரியவர்

ஒரு மனிதன் இயேசுவை வணங்கினான். அதனை இயேசு அனுமதித்துவிட்டு தேவன் ஒருவரே வணக்கத்திற்கு உரியவர் எனப் போதித்தார், மத்தேயு 4:10

அப்பொழுது இயேசு: "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே" என்றார்.

எனினும் இயேசு மக்கள் தம்மை வணங்குவதை அனுமதித்தார். "அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து..." மத்தேயு 8:2

இயேசுவை வணங்கும்படி பைபிள் ஆணையிடுகிறது

"குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்." யோவான் 5:23

"... தூதர்கள் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக் கடவர்கள்." எபிரேயர் 1:6

"இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." பிலிப்பியர் 2:10, 11

முஹம்மது: இயேசு வணங்கத்தக்கவர் அல்ல என்றார்

இயேசு வணங்கத்தக்கவரில்லை என குர்‍ஆன் சொல்கிறது:

சூரா 43:81: " (நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!"

விளக்கம்

தேவ‌ன் ஒருவ‌ரே வ‌ண‌ங்க‌த்த‌க்க‌வ‌ர். ம‌னித‌ர்க‌ள் ஆட்சியாள‌ர்கள் என்ற வகையில் வ‌ண‌க்க‌த்தைப் பெற்றார்க‌ள். ஆனால் தேவ‌ன், அவ‌ர் ம‌ட்டுமே வ‌ண‌ங்க‌த்த‌க்க‌வ‌ர் என்கின்ற‌ உரிமையை க‌ட்டளையின் மூலம் நிலை நாட்டினார். இயேசு அத‌னைப் போதித்தார்; வ‌ண‌க்க‌த்தினையும் பெற்றார். இயேசு யார் என்று முஹம்மதுவுக்குத் தெரிய‌வில்லை; என‌வே தேவ‌ மைந்த‌னை வ‌ண‌ங்க‌ ம‌றுத்தார்.

ஜெபம்

இயேசு தம் சீஷர்களுக்கு எளிய முறையில், இதயத்தின் ஆழத்தினின்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். தேவன் இதயத்தினின்று வருவனவற்றையே கவனிக்கிறார் - வெளிப்படையானவைகளை அல்ல‌ என போதித்தார்.

"நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்…” மத்தேயு 6:5-13

பரலோகப் பிதாவுடனான உறவினை வெளிப்படுத்தும் தொடர்பே உண்மையான ஜெபம் என இயேசு கற்றுக்கொடுத்தார்.

முஹம்மது வெளியரங்கமான தொழுகை முறைகளையே போதித்தார்: (புகாரி தொகுப்பு 1 ன் படி)

488 - தொழும் ந‌பரின் குறுக்கே செல்லுதல் அவனின் தொழுகையை பயனற்றதாக்கும்.

489 - ஒருவர் தொழும்போது அவரின் குறுக்கே செல்லுதல் பாவமாகும்

660 - இமாம் (வெளியர‌ங்கமான தொழுகை முறைகளை நடத்தும் இஸ்லாமிய மார்க்கத்தலைவர்) தொழுகையிலிருந்து எழும் முன்பு எழுவது கூடாது. அவ்வாறு செய்தால் கடவுள் அவனின் முகத்தை கழுதையின் முகத்தைப் போலாக்குவார்.

685 - தொழுபவர்களின் வரிசை (ஆண்கள்) நேராக இல்லாவிட்டால், கடவுள் உங்கள் முகத்தை மாற்றுவார்.

690 - தொழுபவர்களின் வரிசை நேராக இல்லாவிட்டால் அது நல்லதொரு தொழுகை அல்ல‌.

717 - தொழுகையின்போது மேலே பார்த்தால் உங்களின் கண் பார்வை போய்விடும்.

759 - குனிந்து நிமிர்தலைச் சரியாகச் செய்யாவிட்டால் உங்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

இந்த மனித‌ர்கள் (இயேசு, முஹம்மது) முற்றிலும் மாறுபட்டவர்கள். இருவரும் உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளனர். கிறிஸ்துவர்கள் இயேசுவையும் இஸ்லாமியர்கள் முஹம்மதுவையும் பின்பற்றுகின்றனர். இருவரும் கடவுளிடத்தினின்று வந்தவர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் அவர்களின் போதனைகளாளும் நடத்தையாலும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு இருக்கின்றனர். எனவே ஒருவர் மட்டுமே தேவனிடம் இருந்து வந்திருக்க முடியும்.

கள்ளத் தீர்க்கதரிசிகள் வருவார்கள் என இயேசு சொன்னார்: "அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் ". மத்தேயு : 24:11

முஹம்மது இத்தகைய கள்ளத்தீர்க்கதரிசி என்கின்ற வரிசையில் பட்டியலில் வர வாய்ப்புள்ளதா?

ஆதார நூற்ப்பட்டியல்:

[1] இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்ட தமிழ் பைபிள்
[2] ஜான் டிரஸ்ட் வெளியிட்ட குர்‍ஆன் தமிழாக்கம்
[3] "Sahih Al-Bukhari" - "The Translation of the Meanings of Sahih Al-Bukhari", translated by Dr. M Khan, pub. by Kitab Bhavan, New Delhi, India.
[4] "Sahih Muslim", translated into English by A. Siddiqi, pub. by International Islamic Publishing House, Riyadh, Saudi Arabia.
[5] "Sirat Rasulallah" - "The Life of the Prophet of God", translated as "The Life of Muhammad" by A. Guillaume, pub. by Oxford University Press, London, England.
[6] "The History of Tabari", published by SUNY, Albany, New York, USA.
[7] "Sunan of Abu Dawud", published by Al-Madina Publications, New Delhi, India.

Source: இயேசுவா முஹம்மதுவா? உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு


Isa Koran Home Page Back - Silas Index Page
Hosted by www.Geocities.ws

1